Monday, January 09, 2017

தரமற்றதுதான் பேயாட்சி நடத்தும்


அன்புச்சகோதரர் ஜோதிஜியிடம் இன்னும் டாலர் நகரம் நூல் போல இன்னும் பத்து பாகங்கள் வரை எழுதச் சரக்கு இருக்கும்பொழுது ஏன் அதற்குள் பழைய குப்பைகளைக் கிளற ஆரம்பித்தார் என்று முதலில் எனக்குப் புரியவில்லை. 

ஒருவேளைத் தனது கடந்தகாலத் தனது எழுத்து அனுபவங்களுக்குள் சென்று வருவதன் மூலம் சுகமான பழைய ஞாபகங்களை அசை போடுவதற்காக இருந்திருக்குமோ என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது பழசு சுகம் என்ற வார்த்தை என் ஞாபகத்திற்கு வந்தது. 

சிலகாலம் எழுதாமல் இருந்து பழைய குப்பைகளைக் கிளறி தனக்குள் கனன்று கொண்டிருந்த தீயைப் போல ஒவ்வொருவரின் மனதில் உள்ள உள்ளக் கிளர்ச்சியை கிளறிவிட்டிருக்கலாம் என்று எண்ண வைத்துவிட்டார். 

மனதில் தோன்றுவதை எழுத்தில் கொண்டு வருவதென்பது எளிதில் வசப்படும் விடயமல்ல. 

ஆனால் வார்த்தைகளை வசப்படுத்தியதால் இதுவரை 700 பதிவுகளுக்கு மேல் எழுதி 7 மின் நூல்களை எழுதி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தையே வலையுலகில் ஏற்படுத்தி இருக்கிறார். 

வாசித்துக் கொண்டிருப்பவனை நகரவிடாமல் இழுத்துச் செல்லும் சூத்திரத்தைப் புரிந்து எழுதுவதைக் கண்டிப்பாகப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

சரி. அவர் கிளறிய பழைய குப்பைகளை நாமும் நம் பங்கிற்குக் கொஞ்சம் கிளறுவோமா? 

தனது பதிவுலக எழுத்து அனுபவங்களையும் தனது புதுவயல் வாழ்க்கையில் ஆரம்பித்துத் திருப்பூர் வாழ்க்கையில் நேர மேலாண்மை வரை தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பல்வேறு விடயங்களைப் பற்றிய தனது பார்வையையும் எண்ணங்களையும் சேர்த்து 25 அத்தியாயங்களில் தொகுத்தளித்திருக்கிறார். அருமை என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை. 

ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதத்துடன் வெட்டி ஒட்டிப் பதிவு என்ற பெயரில் எதைப்பற்றியாவது எழுதிக் கொண்டிருப்பவர்கள் நடுவில் கவர்ச்சிக்கும் கருத்துக்கும் நடக்கும் போராட்டத்தில் எப்போதும் கவர்ச்சி முன்னால் நிற்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு தான் சொல்ல வந்த கருத்துக்களையும் வெகு அழகாக முன் வைக்கும்போது நம்மால் கவர்ச்சியை வெகு விரைவாகக் கடந்து செல்ல முடிகிறது. 

அவருடைய கருத்துக்கள் ஒரு நிமிடமாவது நின்று மனதில் அசை போட வைத்துவிடுகிறது. அதுதான் அவரின் வெற்றியின் ரகசியம் என்று நான் நினைக்கிறேன்). 

நாம் எப்படி ஒன்றைப்பார்க்கிறோம் எப்படி அதனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி எழுத்தில் காட்டுகிறோம் என்பதன் சூட்சுமத்தை புரிந்து விட்டதால் வார்த்தைகள் தானாக வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. 
நாற்பது வயது என்பது வாழ்க்கையின் நடுப்பகுதி. 

அதைத் தாண்டும்பொழுதுதான் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் மீதப்பகுதி பற்றிய எண்ணம் பயம் ஏற்படுகிறது. சகோதரர் அதைத் தாண்டுவதை அதன் மன ஓட்டங்களை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். 

கண்டிப்பான தந்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு இன்று தான் தந்தை என்ற ஸ்தானத்தை அடைந்தவுடன் அவருடைய செயல்களனைத்தும் சரி என்ற புரிதலை காலம் ஏற்படுத்தும்பொழுது அவரைக் காலன் கொண்டு சென்றிருப்பான். அப்பொழுதுதான் அவரது அருமையை நாம் உணர முடிகிறது என்ற உண்மையை அனுபவித்து எழுதியிருக்கிறார். 

அன்புச்சகோதரர் அப்துல்ஹமீத் யாரைப் பேட்டி கண்டாலும் அவரது முதல் கேள்வி தங்களது பிறந்த ஊர் என்ன? என்பதுதான். உலகமெல்லாம் சுற்றினாலும் தான் பிறந்த ஊர் கிராமமாக இருந்தாலும் அதுதான் ஒருவனுக்குச் சொர்க்கம். அதுவும் தொழில் நிமித்தம் வேறு ஊரில் வாழ்க்கையைக் கடத்திவிட்டு தனது குழந்தைகளுக்குத் தான் பிறந்து வளர்ந்து சுற்றிய இடங்களையும் இளமைக்கால நண்பர்களையும் அறிமுகம் செய்யும்பொழுது நமது குழந்தைப் பருவத்துக்கே சென்று விடுவோம். 

ஜோதிஜியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். 

தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியபொழுது அவர்களது நடவடிக்கைகளை ஒரு தந்தையாக அனுபவித்து எழுதும்பொழுது இன்றைய கல்வி நிலையைப் பற்றியும் அதன் விளைவைக் கேள்விக்குள்ளாக்கி நம்மையும் கவலை அடையச்செய்துவிட்டார். 

சென்ற தலைமுறையின் அம்மாக்கள் வீடே உலகம் என்று வாழ்ந்தவர்கள். இன்றைய குழந்தைகள் உலகமே வீடு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஜோதிஜியின் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நடந்த நிகழ்வுகள் நம் வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகள்தான். அதிலும் வெளிநாடு வாழ் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். ருசிப்புத்தன்மை இருந்தால் இனிக்கும். தலைமுறை இடைவெளியை இவ்வளவு இனிமையாகப் பதிவு செய்து வாசிப்பவர்களையும் ரசிக்க வைத்துவிட்டார் . 

ஒரு ரயில்வே ஸ்டேசனில் நாம் நுழைந்தால் ஏற வேண்டிய ரயிலைப் பற்றிச் சிந்திப்போம். ஆனால் சகோதரர் சிந்தனை ரயில் ஏறிச் சுருக்கமாகப் பேசு என்ற பதிவின் மூலம் சமுதாய நிகழ்வுகளில் நம்மையும் விலாவாரியாகச் சிந்திக்கப் பயணிக்க வைத்துவிட்டார். 

தினந்தோறும் மலரும் பூக்கள் என்ற பதிவில் நாம் பணி நிமித்தம் ஓடும் ஓட்டத்தில் அனுபவிக்கத்தவறும் அன்றாடக் காலைப்பொழுதில் இவ்வளவு இனிய விடயங்கள் இருக்கிறதா என்று எண்ண வைத்து நம்பிக்கையையும் விதைத்து வைக்கிறார்., 

ஊரில் ஒரு திருவிழா வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சி என்றால் அதன் மூலம் நமக்கும் மக்களுக்கும் எவ்வளவு சந்தோசம் என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஒரு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் 13.25 லட்சம் ரூபாய் சம்பாதித்த கேவலமான நிகழ்வு தனது வீட்டுச் சுப நிகழ்ச்சியை இவ்வளவு தரங்கெட்டதனமாக நடத்த முடியுமா என்று சிந்திக்க வைத்துவிட்டது. விழா தரும் போதை பதிவில் விழாக்களின் சந்தோசங்களை நுகர்வு கலாச்சாரம் எவ்வாறு சமுதாயச் சீர்கேடாக்கிவிட்டது என்பதைப் படிக்கும்போது மனம் வலிக்கிறது. 

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்று அன்றே ஞானத்தந்தை கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஆனால் எல்லா விளம்பரங்களும் வீட்டிற்குள் வந்தபிறகு புத்தியை அடகு வைத்துவிட்டு புதிதாய் வாங்க கற்றுக் கொண்டிருக்கிறோம். நுகர்வு கலாச்சாரம் நம்மை விளம்பரங்களின் மூலம் அடிமைகளாக்கியதன் விளைவை இன்னும் உணராமல் இருப்பதைச் சமுதாயச் சிந்தனையுடன் பதிவு செய்திருக்கிறார் . 

ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் சமுதாயத்தில் நிகழும் கூத்துக்களையும் விவரித்து ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தாமதமானால் தரமற்றதுதான் பேயாட்சி நடத்தும் என்று போட்டு உடைத்துவிட்டார். 

பொதுவாக வலைத்தளங்களில் எழுதுபவர்களும் உலவுபவர்களும் எளிதான விடயங்களையே விரும்புவார்கள். ஆனால் அன்புச்சகோதரர் ஜோதிஜி தனது ஒவ்வொரு பதிவிலும் சமுதாயத்தில் நிகழ்பவற்றிலிருந்து தான் கற்றவற்றையும் பெற்றவற்றையும் தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் தனது வலைத்தளத்தின் மூலமாகப் பொது வெளியில் தனது பாணியில் பதிவு செய்து வருகின்றார். 

அவரிடமிருந்து இன்னும் நிறைய வரவேண்டியதிருக்கிறது. நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம். 

அன்பான வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும். 

மா.ரவீந்திரன் 
மதுரை.


3 comments:

த. சீனிவாசன் said...

பழைய குப்பைகள் மின்னூல் பற்றிய அருமையான அறிமுகம்.
நன்றி ரவீந்திரன்.

Rathnavel Natarajan said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

// அவருடைய கருத்துக்கள் ஒரு நிமிடமாவது நின்று மனதில் அசை போட வைத்துவிடுகிறது... //

அண்ணனுக்கு அது தான் கை வந்த கலை...