Tuesday, June 11, 2013

கோடை விடுமுறை -- கொடுமையும் குமுறலும்

நான் வீட்டுக்குள் நுழைந்த போது மூவரும் புதுப்பையில் அவர்களின் இந்த வருடத்திற்கான  புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுப் பூசாரி வருடந்தோறும் சொல்லும்  அதே மந்திர வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

“கர்ச்சீப்,பென்சில், ரப்பர் என்று எதையாவது தொலைத்து விட்டு வந்தால் நிச்சயம் வாங்கியே தர மாட்டேன்” என்ற போது தெரியாத்தனமாக நான் வாயைத் திறந்து விட்டேன்.

“ஆமாப்பா. எனக்கிட்டே வந்து கேட்கக்கூடாது” என்றேன். பூசாரியின் கோபப் பார்வை என் பக்கம் திரும்பியது.

“இவங்களே கெடுத்ததே நீங்க தான்” என்றார்.

சிரித்துக் கொண்டே “நான் என்ன தப்பு செய்தேன்?

பொறியை பற்ற வைக்க பட்டாசு வெடிக்கத் தொடங்கியது.

“தொலைத்து விட்டேன் என்று வந்து நின்றதும் போய் புதுசு வாங்கிட்டு வந்துடுன்னு யார் சொன்னா?” என்று என் முகத்தைப் பார்க்க தலையை குனிந்து கொண்டே அறைக்குள் சென்ற போது உள்ளே உரையாடல் நடந்து கொண்டிருந்தது.  நமக்குத்தான் பகவான் எப்போதும் நாக்கில் இருப்பவர் தானே.  வாய் சும்மாயிருக்குமா?

பூசாரி எத்தனை மணி நேரம் இவங்களை படுத்தி எடுத்துக் கொண்டிருப்பாரோ?  என்று நினைத்துக்கொண்டே சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று என் பொதுப்படையான கேள்வியை கேட்டு வைக்க அது அடுத்த வெடிக்கான அச்சாரம் என்று தெரியாமல் போய்விட்டது.

“என்னப்பா நாளைக்கு பள்ளிக்கூடம் திறக்கப் போகுதா?

“ஆமா அதுக்கென்ன இப்போ?” மூத்தவரிடமிருந்து சீறிப்பாய்ந்து வந்தது.

பூசாரி வாயை பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு முறையும் பூசாரி மூவரையும் உட்கார வைத்து அசராமல் வறுத்து எடுத்துக் கொண்டிருப்பார். அவர் தாளித்துக் கொண்டிருக்கும் போது  மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்களை காப்பாற்ற வேண்டுமே? என்று நான் ஆட்டத்திற்குள் நுழைந்தால் மூவரில் இருவர் என்னை கவிழ்ப்பதில் தான் குறியாக இருப்பார்கள். இதிலும் ஒருவர் பலே கில்லாடி. கட்சி தாவல் தடைச் சட்டத்தை கண்டு கொள்ளாதவரைப் போல காரியத்தைப் பொறுத்து என் பக்கம் சாய்வார்.

ஆனால் மூன்று ஓட்டுகளில் ஒரு ஓட்டு என் பக்கம் நிரந்தரமாக இருக்கும். எப்போதும் என் சூழ்நிலை இப்படித்தான் என்று தெரிந்த போதிலும் விடாமல் கேட்டேன்.

"என்னப்பா என்னோட பக்கம் வேற ஏதாவது வாங்கித் தர வேண்டியிருக்கா?" என்றேன்.

இருவர் வேகமாக “எல்லாமே ஓ.கேப்பா” என்றார்கள்

ஒருவர் மட்டும் வேகமாக யோசித்துக் கொண்டே "இன்னும் ஒரு விசயம் பாக்கியிருக்கு" என்றார்.

நான் என்ன என்று கேட்பதற்குள் "ஸ்போர்ட்ஸ் ஷு" என்றார்.

அதாவது தனிப்பட்ட முறையில் காலையில் ஓட்டப்பயிற்சி எடுக்க அதற்கு ஒரு ஷு உள்ளது என்று தெரியாத்தனமாக ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததை கெட்டியாக பிடித்துக் கொண்டு வைத்து சில வாரங்களாக நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றார்.

எனக்குத் தெரியும். இவர் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நான் அம்பேல்.  பூசாரி என்னை ஏறிட்டுப் பார்க்க நான் மெதுவாக வெளியே நகர முயற்சித்தேன்.

"அப்பா உங்களைத்தான் கூப்புடுறேன்.எனக்கு பதில் சொல்லாமல் போய்க்கிட்டேயிருந்தா எப்படி? " என்றார்.

"இல்லம்மா செல் டவர் எடுக்கல. இரு பேசிட்டு வந்துடுறேன்" என்றபடி நகர வேகமாக ஓடிவந்து வாசல்படியில் கைகளை விரித்துக் கொண்டு “உள்ளே போங்க” என்றார். நிச்சயம் இன்றைக்கு ஆப்பு தான் என்று மனைவி முனங்கிக் கொண்டே சொன்ன வார்த்தை என் காதிலும் விழுந்தது.

தவிர்க்க முடியாமல் உள்ளே வந்தேன். மிரட்டி பணிய வைக்க முடியாது. உடனே என் சட்டைப்பை, கைப்பேசி, பையில் உள்ள கண்ணாடி என்று கைக்கு எட்டும் சமாச்சாரங்களில் கைகளை விட்டு பறிக்கத் தொடங்குவார். அதகளம் உருவாகும்.

மூவரில் மூத்தவர் ஆணாக பிறந்திருக்க வேண்டியவர். காவல்துறை அதிகாரியாவது தான் என் லட்சியம் என்று சொல்லியுள்ளார்.  யார் சொல்லிக் கொடுத்தார்கள்? எதனால் இந்த ஆசை வந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது.

இரண்டாம் வகுப்பு சென்ற போதே இந்த ஆசையை சொல்லிவிட்டார். இந்த வருடம் ஐந்தாம் வகுப்பு செல்கின்றார்.அசாத்தியமான திறமைகள் உடையவர்.  இது தான் எனக்கு பல சமயம் பிரச்சனைகளை ஒவ்வொரு சமயத்திலும் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.  இவர் பாலர் பள்ளியில் நுழைந்தது முதல் இன்று வரைக்கும் வகுப்பில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்.

ஆங்கிலம் பயிற்று மொழி என்றாலும் தமிழ் வழிக்கல்வியில் உள்ள புரிதலை தொடக்கத்தில் புரிய வைக்க இன்று இரண்டு மொழியிலும் தன்னை சரியாக நிலைநிறுத்திக் கொண்டு விட்டார்.  இவருக்கு கலையார்வம் என்பது ரசிக்க மட்டுமே.  அந்தப் பக்கமே செல்ல மாட்டார். ஆதரிக்கவும் மாட்டார். 

ஆனால் வீட்டில் கடைசி பார்ட்டிக்கு இந்த கலையார்வம் தான் மூச்சே. அவருக்கு வீட்டில் நான் வைத்துள்ள பெயர் ஜில் ஜில் ரமாமணி. ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் இவரின் நடனம் இருந்து விடுகின்றது. கூட்டத்தோடு கோவிந்தா போடும் அந்த நடனத்திற்காக இவர் வீட்டில் செய்யும் பந்தா என்பதை சொல்லி மாளாது.

ஆனால் இதற்குப் பின்னால் ஒரு நுண்ணரசியல் உண்டு.  அந்த நடனத்திற்காக வாங்கும் பணத்தில் நவீன ரக ஆடைகள் என்ற பெயரில் தரப்படும் ஆடைகள் என்பது அன்று மட்டுமே பயன்படுத்த முடியும்.  அத்துடன் உதட்டுச் சாயம் என்ற பெயரில் ஒப்பனை தொடங்கி ஏராளமான விசயங்கள் அவருக்குப் பிடித்த பல சமாச்சாரங்கள் இருப்பதால் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றார்.

ஆண்டு விழா நடக்கப் போகும் அந்த ஒரு மாதத்தில் வீட்டில் இருப்பவர்களை கொன்னு கொலை எடுப்பது தான் இவரின் முக்கிய பொழுது போக்கு.  ஆனால் நடுவே இருக்கும் ஒருவருக்கு இது போன்ற எந்த அக்கப் போர்களையும் கண்டு கொள்வதே இல்லை. 

"நான் மிஸ் ஆகப் போறேன்" என்பதோடு குடும்ப குத்து விளக்காக இருப்பதிலேயே திருப்தியடைந்து விடுகின்றார்.

இவர்கள் படிக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு பிறகு தான மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துகின்றார்கள். விளையாட்டு, நூலகம் என்று ஒவ்வொன்றுக்கும் வருடந்தோறும் கட்டணம் வாங்கினாலும் பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லை.  நானும் நேரிடையாகச் சென்று போராடிப் பார்த்தும் பலன் பூஜ்யம் தான்.

மூத்தவர்  முதன் முதலாக  பள்ளியில் நுழைந்து முதல்  மூன்று வருடங்களில் கலந்து கொண்ட அத்தனை விளையாட்டுகளிலும் கோப்பைகளை அள்ளிக் கொண்டு வந்தார்.  தொடர்ந்து வந்த வருடங்களில் பேச்சு கட்டுரைப் போட்டிகள் என்று எதையும் விட்டுவைக்க வில்லை.  ஆனால் அடுத்தடுத்து பள்ளி நிர்வாகம் புதிய கட்டிடங்களை கட்டுவதில் தான் குறியாக இருக்க பல திறமைகளைக் கொண்ட மாணவர்கள்  செய்வதறியாது இருக்கின்றனர்.

படிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை என்பதாக மாற்றி விட்டனர்.   குழந்தைகளுக்கு விளையாட்டு ரொம்ப முக்கியம் என்று சொல்லி வைக்க வரிசையாக வீட்டுக்கு ஒவ்வொரு பொருளாக வந்து இறக்க வேண்டியதாகி விட்டது. ஒன்றின் ஆர்வம் தீர்ந்து போக அடுத்து உருவாக வீட்டில் ஒரு காயலான்கடைக்குத் தேவையான அத்தனை பொருட்களும் சேரத் துவங்கியது. 

இதில் பள்ளியில் நடக்கும் கராத்தே வகுப்பு மட்டும் மிஞ்ச திடீரென்று ஒருநாள் மூத்தவர் என்னிடம் "நான் கராத்தே வகுப்பு சேர வேண்டும்" என்றார்.

"சேர்ந்து கொள்" என்றேன்.

"வியாழன் ஞாயிறன்று அருகே உள்ள ஒரு இடத்தில் காலை நேரத்தில் நடத்துக்கின்றார்கள்.  அங்கேயும் செல்வேன்" என்றார்.

"சரி.  கேட்டுக் கொண்டு வா.  ஆனால் நான் எங்கேயும் வர மாட்டேன்.  நீ தான் எல்லாத்துக்கும் பொறுப்பு" என்று ஒதுங்கி விட்டேன்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் காரத்தே ஆசிரியரின் அலைபேசி எண் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். ஞாயிறன்று காலை தூக்கம் போய்விட்டது. ஞாயிறன்று காலையில் எழுதும் பழக்கத்தை மாற்ற வேண்டியதாகி விட்டது. ஆறு மணிக்குள் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.  எட்டு மணிக்குப் போய் கூட்டி வர வேண்டும்.

ஜல்லிக்கட்டு காளையாக திரிந்து கொண்டிருப்பவனுக்கு அடக்க வந்தவர் போலத்தான் இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இருக்கின்றது.  பயப்பட வேண்டியதாக உள்ளது.  அல்லது நடிக்க வேண்டிய அவசியம் உருவாகி விடுகின்றது.

மூவருக்கும் ஒரே மாதிரியான சுதந்திரம். அவரவர் பாதையை அவரவர் தீர்மானிக்க வேண்டிய அவசியத்தை கற்றுக் கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.தேவைப்படும் போது தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம். பள்ளி எதிர்பார்க்கும் மதிப்பெண்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கத்திலும் இன்று வரையிலும் எந்த பழுதும் இல்லை. நான் கண்டிப்பாக எதிர்பார்க்கும் மொழி குறித்த திறமையிலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருந்தாலும் கிராமத்து சிந்தனைகளுடன் தான் வளர்த்துக் கொண்டு வருகின்றோம்.உறவினர்கள் வீட்டுக்கு இவர்கள் செல்லும் போது இது குறித்த ஆச்சரியங்களை அவர்கள் சொல்வது உண்டு.

மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விட சூழ்நிலைகளே அவர்களை ஒவ்வொரு இடத்திலும் அவரவர் அனுபவங்கள் மூலம் கற்றுக் கொடுத்து விடும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அப்போது எது தேவை? எது தேவையில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதே முக்கியமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அந்த உணர்தலை தான் என் செயல்பாடுகள் மூலம் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றேன்.

கோடை விடுமுறை தொடங்கிய பொழுதே மூவரும் சேமித்த தொகையை சுரண்டி எடுத்த போது பத்தாயிரம் அளவுக்குத் தேறியது.  நண்பரிடம் ஏற்கனவே கேட்டு வைத்திருந்தேன்.  

"இப்போது சிறப்பு தள்ளுபடி ஒன்று வந்துள்ளது.  ரூபாய் 14500க்கு  கணினி ஒன்றை வாங்க முடியும் என்று சொல்லியிருந்தார்".  

யூபிஎஸ் மற்றும் பெரிய எல்ஈடி திரை போன்ற வசதிகளை பார்த்த போது நன்றாகவே இருந்தது.

நான் தொடக்கத்தில் வாங்கிய ஒன்னே கால் லட்ச கணினி என்பது இப்போது ஐந்தில் ஒரு பங்கு. இது பத்தாண்டுகளில் நடந்த கணினி புரட்சி.

இவர்கள் பிறந்த போது நான் வாங்கிய கணினி கண்ணீர் விடாத குறையாக கதறிய போதும் நான் விட்டுவிடத்தயாராக இல்லை.  இரண்டு மூன்று முறை அதை சரி செய்து மீண்டும் கண்ணில் பூச்சி ஓடும் அளவுக்கு இருந்த போதிலும் அதையே சரி செய்து ஓட்டிக் கொண்டிருந்த போது கடைசியாக நண்பர் சொன்னார்.

"நான் ஒரு லேப்டாப் தருகின்றேன். பணம் மெதுவாக கொடுங்க" என்றார்.

அவர் எனக்கு உதவி செய்ததற்கு முக்கிய காரணம்  ஒன்று உண்டு.

நான் கணினி என்ற பெயரில் வைத்துக் கொண்டிருந்த வஸ்துவை ஒவ்வொரு முறையும் அவர் அலுவலகத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று அவரை படாய் படுத்திக் கொண்டிருந்ததே. அதைவிட அதன் உதிரிப்பாகங்கள் சந்தையில் இல்லை என்பதோடு அதன் உற்பத்தியையும் நிறுத்தி விட்டார்கள் என்ற போது தான் என் மனம் மாறியது.

மடிக்கணினி வந்த போது சுகமாகத்தான் இருந்தது.  மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் வில்லு வண்டியை ஓட்டுபவன் போல சுகமாக இருந்தது.  உதாரணம் கூட டிவிஎஸ் 50 என்று வரமாட்டேன் என்கிறது.  காரணம் நம்ம சிந்தனை அப்படித்தான் இன்று வரைக்கும் உள்ளது.

அப்போது சொந்த தொழில் விசயமாக மடிக்கணினி அவசியமாக தேவைப் பட்ட நிலையில் இவர்கள் முதல் வகுப்பில் நுழைந்திருந்தார்கள். கணினி பக்கம் வந்ததில்லை.  கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் நடக்கும் கணினி வகுப்புகள், அது சம்மந்தப்பட்ட பாடங்கள் என்று என்னிடம் வந்து கேட்க அது குறித்து செய்முறை விளக்கத்தை மூவரையும் வைத்து பாடம் நடத்த நானே வலியச் சென்று ஆப்பு வாங்கிய கதையாக மாறிவிட்டது. காரணம் பள்ளியில் கணினி என்பதை காட்சிப் பொருள் போல காட்டிக் கொண்டிருந்தார்கள். அவசியத்தை புரிந்து கொண்டே பாடம் எடுத்தேன்.

இருவர் நான் சொல்லும் பாடத்தை கேட்டுக் கொண்டு புத்தகத்தை படிக்கச் செல்ல ஒருவர் மட்டும் நான் கொஞ்சம் செய்து பார்க்கின்றேன் என்று தான் மடிக்கணினியை என்னிடமிருந்து கைப்பற்றினார்.

அதுவே சென்ற வருடத்தில் அவருக்கே சொந்தமாக மாறிவிட்டது போல ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டு கண்ணில் விரல் விட்டு ஆட்டத் தொடங்க எனக்கு விழி பிதுங்கத் தொடங்கி விட்டது.

ஒருவர் சென்ற பாதையில் மற்ற இருவரும் பின்னால் செல்ல மூவரின் கைப்பட்டு ஏற்கனவே சூடு குறையாமல் இருந்த மடிக்கணினி மாசமாக இருக்கும் பெண் போல முனங்கத் தொடங்கி விட்டது.

பூசாரியிடம் முறையிட்டேன்.

கதைக்கு ஒன்றும் உதவுவது போலத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் இவர்களின் நேரத்தை குறித்து வைத்து இந்த நேரத்தில் தான் உங்களுக்கு என்ற போது அலைபேசியில் சரியாக அலாரம் வைத்துக் கொண்டு அசராமல் என்னை கண்காணிக்கத் தொடங்கினர்.  மூவர் கைக்குச் சென்று திரும்பும் போது நான் அங்கே இருப்பதில்லை.  ஏதோவொரு வேலை வந்து விட வேறு பக்கம் நான் நகர்ந்து போய்விட வேண்டிய சூழ்நிலையும் அவர்களுக்கு சாதமாக மாறத் தொடங்கியது.

ஆனால் என்ன கற்றுக் கொண்டார்கள்? என்ன செய்கின்றார்கள் என்பதே எனக்குத் தெரியவில்லை.ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகின்றார்கள் என்று ஒரு தடவை பூசாரியிடம் முறையிட்டேன்.

"நீங்க வேணா பாருங்க.  மூத்தவ உங்களுக்கு பாடம் எடுப்பா" என்றார்.

நான் முக்கி முக்கி கற்றுக் கொண்ட பல விசயங்கள் முனங்காமல் ஒருவர் கற்றுக் கொண்டு அடுத்தவரிடம் சொல்ல அடுத்தவர் அவருக்கு போட்டியாக மாற ஒவ்வொரு நாளும் ரணகளமாக மாறத் தொடங்கியது.  மொத்தத்தில் எனது கடவுச் சொற்களில் கை வைக்கும் அளவுக்கு வளரத் தொடங்கினர்.

சரி இவர்களை இனி எதிர்த்துக் கொள்வதில் பிரயோஜனமில்லை என்று கூகுளில் போய் எப்படி எந்த தளத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு நாள் கற்றுக் கொடுத்தேன்.  அது வரைக்கும் உள்ளே சேமித்து வைத்திருந்த விளையாட்டுகளில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.  மற்ற நேரங்கள் பெயிண்ட் ல் படங்கள் வரைந்து கொண்டிருந்தனர்.  பல சமயம் வேர்ட் ல் போய் புத்தக கடிதங்களை டைப் செய்து கொண்டிருந்தார்கள்.

என்றைக்கு கூகுள் தளத்தை அறிமுகம் செய்து வைத்தேனோ அன்றைக்கே என் விதி மாறத் தொடங்கியது.

கண்ட பக்கம் போகாமல் இருக்க கேம்ஸ் என்ற வார்த்தையை டைப் செய்தால் அது என்னன்ன வார்த்தைகளைக் கொண்டு வந்து காட்டுகின்றது என்பது தொடங்கி கணினியில் உள்ள மோசமான விசயங்கள் எதெது என்று ஒரு பத்து நிமிடங்கள் தான் பாடம் எடுத்துருப்பேன்.

நடத்திக் கொண்டிருக்கும் போதே மூத்தவர் "சரி சரி நீங்க போகலாம்" என்றார்.

இவங்களுக்கு என்ன தெரியப்போகின்றது என்ற அசட்டையுடன் ஒதுங்கிச் சென்றது தான் என் முக்கிய தவறாக மாறிப் போனது.

கேம்ஸ் சைட் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதைப் பற்றி அடுத்த இரண்டு நாளில் மூத்தவர் தனது ஆராய்ச்சியை முடிதது வைக்க வந்த ஞாயிற்றுக் கிழமை எனக்கு புலம்பல் ஞாயிறாக மாறிப் போனது.

வேறு எந்த வழியில் யோசிக்கலாம் என்று மண்டையை சுரண்டிய போது அடுத்த ஆலோசனையை பூசாரி தான் எடுத்துக் கொடுத்தார்.

"இனி ஒவ்வொரு ஞாயிறு மட்டுமே உங்களுக்கான நான். அன்று அப்பா உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்.  என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளலாம்.  ஆனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரைக்கும் அதிக அளவு கணினி தொலைக்காட்சி பக்கம் கவனம் செல்லக்கூடாது " என்ற சமாதான ஒப்பந்தத்தில் மூவருடன் கையெழுத்து போட்டுக் கொண்டேன்.

வண்டி சரியாகவே போய்க் கொண்டிருந்தது.  அலுவலகம் விட்டு வரும்போது தூங்கிக் கொண்டிருப்பார்கள்.  சாப்பிட்டு முடித்து விட்டு எழுத இயல்பாக இருந்தது.  ஆனால் எல்லா தினங்களிலும் முடியாமல் போய் ஞாயிறு அன்று கடன் கேட்டு வாங்கத் தொடங்க மூவரும் அடிக்க பாய்ந்து வந்தார்கள்.  

காரணம் ஒவ்வொரு ஞாயிறும் ஆடு புலி ஆட்டம் போல கணினியில் முன்னேறிக் கொண்டிருந்ததை நான் யூகித்திருக்கவில்லை.

சென்ற வருடத்தில் ஒரு நாள் இவர்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற அரைமணி நேரம் அமர்ந்து பார்த்த போது அப்போது தான் இந்த கணினி சம்மந்தபபட்ட விளையாட்டுகளின் சூட்சமத்தை ஓரளவுக்கு புரிநது கொள்ள முடிந்தது.  சரி எழுதுவதை கொஞ்ச நாள் நிறுத்தி வைத்து விடுவோம் என்று முதல் ஆறு மாதங்களை இவர்களுக்காக தியாகம் செய்து விட்டு அமைதி காக்கத் தொடங்க அது வேறொரு வகையில் விஸ்வரும் ஆனது.

மூத்தவர் விளையாடிய சமயம் போக மற்ற ஆராய்ச்சிகளில் இறங்கத் தொடங்க இரண்டு முறை ரீ இண்ஸ்டால் செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்டது.

ஆனால் இவர்கள் எனக்கு பாடம் எடுக்கத் தொடங்க எனக்கு பயம் வரத் தொடங்கிவிட்டது. காரணம் இவர்களின் புத்திசாலித்தனம் என்பது எனக்கு பலவித பிரச்சனைகளை தொடர்ந்து உருவாக்க என்னுடைய விருப்பங்களை தியாகம் செய்ய வேண்டியதாக இருந்தது. 2007 ல் வாங்கிய மடிக்கணினி கதறத் தொடங்கியது.  சரி செய்தாலும் மடிக்கணினி சமாதனம் ஆகாமல் படுத்துவிட கீழே ஃபேன் ஒன்றை வைத்தே பிறகே உயிர் பெறத் தொடங்கியது. 

அடுத்த பிரச்சனை உருவானது.

விசைப்பலகையில் உள்ள  எழுத்தை அமுக்கினால் உள்ளே போய் நின்று அடம் பிடிக்கத் தொடங்கியது. மூவரும் குத்திய குத்தில் அதுவும் அல்ப ஆயுசோடு முடிந்து போக அதற்கென்று தனியாக இணைப்பு விசைப்பலகையை மாட்டி வைக்க வேண்டியதாகி விட்டது. அப்போது கூட புதிய கணினி வாங்க வேண்டும் என்ற எனக்கு எணணம் வரவில்லை.

இவர்கள் விளையாடிய மோட்டார் பைக் ரேஸ்கள் முதல் மற்ற விளையாட்டுகள் அனைத்து கணினி உள்ளே இருந்த பாகங்களை பதம் பார்க்கத் தொடங்க பொறுமை இழந்து வெறியோடு கத்தத் தொடங்கினேன்.

அப்போது தான் பூசாரி சொன்னார்.

" நண்பர் சொன்ன அந்த சிறப்புத்தள்ளுபடியை கொண்டு வந்துடுங்க".  என்றார். 

அப்போது மூவரிடமும் பொதுவாக சொல்லி வைத்தேன். 

"மூவரும் மாதம் தோறும் கிடைக்கும் பணத்தை சேமித்து வைங்க. இந்த வருட கோடை விடுமுறையில் புதிததாக கம்ப்யூட்டர் வாங்கலாம்" என்றேன். 

பத்தாயிரம் தேறியது.

இவர்களுக்காக வாங்குவதா? நம் கௌரவம் என்னவாகும் என்று யோசித்துக் கொண்டே தள்ளுபடியில் கிடைத்த தொகையோடு இன்னும் சில வசதிகளை சேர்க்கச் சொன்ன போது மொத்தமாக 20000 என்ற அளவுக்கு வந்து சேர்ந்தது.  அங்கங்கே சுரண்டி உள்ளே கொண்டு வந்த போது வந்த நண்பரிடம் மெது வாகச் சொன்னேன்.

"இரண்டு பாதைகளை உருவாக்கி வைத்து விடுங்க.  அவர்கள் பக்கம் சாதாரண விசயங்களை வைத்துடுங்க" என்றேன். 

மூத்தவரிடம் என் பக்கம் உள்ள கடவுச்சொல்லை சொல்லவில்லை. புதிய கணினி, மாற்றிய இணைய வேக கட்டணச் சலுகை என்று உருவாக்க இணைய வேகம் மின்னல் வேகத்தில் செல்ல எனக்கு சுகமாக இருந்தது. இதுவரையிலும் யூ டியுப் பக்கம் செல்லவில்லையே என்று பிடித்த தளங்கள் ஒவ்வொன்றையும் பார்வையிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். 

என் பின்னால் நின்று கொண்டிருந்த மூத்தவர் நான் என்ன கடவுச் சொல்லை அடிக்கின்றேன் என்று கவனித்திருப்பார் போல.  நான் பார்த்து விட்டேன் என்று கத்திய போது தான் இவர் பின்னால் இருந்ததை உணர்ந்து திடுக்கிட்டேன்.

அடுத்த ரெண்டு நாளில் எதை நோண்டினாரோ மீண்டும் புதிய கணினியில் ரீ இன்ஸ்டால்.  சரி இனிமேல் ஒவ்வொன்றையும் மூடி வைத்தால் தான் பிரசச்னை என்று மூவரையும் வைத்துக் கொண்டு புதிய ஒப்பந்த நகல் ஒன்றை உருவாக்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன்.

அரை மணி நேரம் உட்கார்ந்து பாடம் எடுத்தேன். ரகசியம் எதுவுமில்லா நிலையில் மூவரும் புதிய கணினியை ஆக்ரமித்தனர்.  "இவர்கள் பார்க்கும் தளத்தை பார்த்துக் கொள்" என்று பூசாரியிடம் சொல்லியிருக்க பெரிதான எந்த பிரச்சனையும் உருவாகவில்லை.  

இவர்களின் கோடை விடுமுறைத் தொடங்கும் போது புதிய கணித புதிர்கள் சார்ந்த விளையாட்டுகளை அறிமுகம் செய்து வைப்போம் என்று சென்னையில் பள்ளித் தோழனிடம் சொல்லி வாங்கி அனுப்பி வை என்றேன்.

அவன் புத்திசாலித்தனமாக வாங்கிய அத்தனை விளையாட்டுக்களையும் அவன் கணினியில் சேமித்து வைத்து விட்டு அதனை ஒரு குறுந்தகட்டில் சேமித்து வைத்து எனக்கு அனுப்பினான். அதை எப்படி கணினியில் செயல்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதையும் அழைத்துச் சொல்ல எனக்கு பாதிதான் புரிந்தது.  தபால் மூலம் வீட்டுக்கு உள்ளே வந்த போது இவர்களின் கோடை விடுமுறை தொடங்கியிருந்தது.

அலுவலகத்தில் இருந்து மதியம் உள்ளே வந்தவனுக்கு மூவரும் எனக்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர். சந்தேகப்பட்டு என்னவென்று கேட்க வந்த சிடியை காட்டி தயார் செய்து கொடுங்க என்றனர்.

நண்பனிடம் கேட்டு அதை பாதி தான் புதிய கணினியில் ஏற்றியிருப்பேன்.   

மூத்தவர் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று என்னை அலுவலகத்திற்குச் செல்ல விரட்டினர்.  காரணம் என்னால் முழுமையாக வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை.  சிடியில் இருந்ததை கணினியில் சேமித்து வைத்து விட்டு பார்த்துக் கொள்ளுங்க என்று அலுவலகம் சென்று விட இரவு வந்து பார்த்தபோது அதனைப் பற்றிவிலாவாரியாக சொன்னார்கள்.

ஆனால் அதுவும் ஒரு வாரத்திற்குள் அலுத்துப் போய்விட மறுபடியும் ஆன்லைன் பக்கம் தாவிவிட்டனர். சரி யூ டியுப் பக்கம் சென்று விண்வெளி பற்றிய தளங்களை அறிமுகம் செய்து வைத்த போது அதுவும் முடிவுக்கு வர அடுத்தடுத்து தாவிக் கொண்டேயிருந்தனர். 

என்னால் இவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட முடியவில்லை என்பது மட்டும் புரிந்து ஒதுங்கத் தொடங்கி விட்டேன். 

நான் அதற்குப் பிறகு கண்டு கொள்ளவில்லை. ஆன்லைனில் உள்ள பல கடினமான விளையாட்டுக்கைளை கையாளத் தொடங்க வேடிக்கை பார்ப்பதைத்தவிர எனக்கு ஒன்றும்புரியவில்லை. மனதிற்குள் இருந்த பயம் மட்டும் நாளுக்கு நாள் என்னுள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.  மீண்டும் நண்பனை அழைத்தேன்.  இவர்களின் செயல்பாடுகளை குறித்துச் சொல்லி சரியா? தவறா? என்று கேட்க அவன் கேட்ட கேள்வியை என்னிடமே கேட்டு திரும்பத் தாக்கத் தொடங்கினான்.

"உன் வயசுக்கு நாக்கை அடக்க முடியல என்கிறாய். அவர்களை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றாய். இன்று வரைக்கும் உன் அப்பாவை குறை சொல்லத் தெரிகின்ற நீ ஒழுங்கான அப்பாவாக மாற முடியவில்லையே"  என்று அம்பை என் பக்கம் வீச அமைதி காத்தேன். 

"பேச்சு வார்த்தை குறைந்து போய் இது குறித்த ஆர்வம் மட்டுமே மிஞ்சி விடாதா" என்றேன்.

"ஒரு நாள் முழுக்க ஒயரை பிடிங்கி வைத்து விட்டுப் பார்.  உன்னால் அவர்களுடன் சரிசமமாக பேச முடியாது" என்றான்.

செய்து பார்த்தேன்.  என்னை விட வீட்டில் பூசாரிக்கு ஒவ்வொரு பிரச்சனையும் பூதாகரமாக மாறத் தொடங்கியது. 

பூசாரி கெஞ்சத் தொடங்கினார்.  

"குழந்தைகள் நிறைய பேச வேண்டும். விவாதம் செய்ய வேண்டும் என்று நீங்க சொல்லிச் சொல்லி இன்று ரெண்டு மடங்கு பேசி என்னை கொல்றாங்க." என்றார்.

இது போன்ற சமயங்களில் பூசாரி இறுதியான ஒரு ஆயுதத்தை எடுப்பார்.

"அடுத்த வருடம் ரெண்டு பேரை கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல கொண்டு போய்ச் சேர்க்கப் போகின்றோம்" என்பார்.

டக்கென்று பதில் பாய்ந்து வருகின்றது.

"நீங்க ரெண்டு பேரும் போய்ச் சேருங்க" என்கிறார்கள் 

அடக்குமுறைகள் என்பதை ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்குத் தெரிந்த வகையில் உடைத்துக் கொண்டே தான் வருகின்றார்கள். என் அப்பா மேல் நான் வைத்த குற்றச்சாட்டுக்களைப் போல என் குழந்தைகள் என் மேல் வைக்காமல் இருக்க தினந்தோறும் போரட வேண்டியதாக உள்ளது.

இப்போது கதவை திறந்து வைக்க வீட்டில் தென்றல் வீசுகின்றது.

தொடர்புடைய பதிவுகள்

10 comments:

arul said...

great post about on going generation

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப ரொம்ப சிரமம் தான்... ஆனால் சுகமான சுவாரஸ்யமான சிரமங்கள்... இதை விட என்ன வேண்டும்...? நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது நாம் தான்...

வவ்வால் said...

ஜோதிஜி,

நல்லப்பதிவு, நல்ல எழுத்து நடை, நல்ல அனுபவம்,நல்லா சொன்னிங்க!

குழந்தைகள் கணினி பயன்ப்படுத்துதல் பற்றி முன்னரே சொன்னது தான் மீண்டும் சொன்னால் ,மூனு கால் முயல்னு கணக்கு போடுவீங்க, நிகழ்காலத்தில் சிவா வந்து சொல்வார், அப்புறமா நான் அதையே ஆமோதித்து விடுகிறேன் :-))

இராஜராஜேஸ்வரி said...

இப்போது கதவை திறந்து வைக்க வீட்டில் தென்றல் வீசுகின்றது.

இனிய இல்லம் ..!

ஜோதிஜி said...

இதுக்குப் பெயர் தான் ரியல் ஆப்போ?

saidaiazeez.blogspot.in said...

இன்னா நைனா இம்மா பெர்ஸா எயுதிகீறே!
ரெண்டு நால் ஆச்சுபா முய்சா பட்ச்சு முடிக்க.
இப்ப இன்னாங்க்ற?
நீ பெரிய தில்லாலங்கடி
உன் கொயந்தங்க அவ்ளோ பெர்ய அப்பாடக்கர். அத்தானே?
(ஜோதிஜி, வீட்டில் நடக்கும் மிகச்சாதாரண விஷயத்தையும் மிகவும் விருவிருப்பாகவும் சுவாரசியமாகவும் எழுதி, வாசிப்பவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறீர்கள்.)

ezhil said...

சுகமான சுமைகள்... வரும் தலைமுறை பழையதைவிட பல மடங்கு அதிக அறிவாகத்தான் இருக்கிறது... நாம் அதற்கேற்றார் போல் தகவமைத்துக் கொள்ள வேண்டும்....

Ranjani Narayanan said...

குழந்தைகள் எதையுமே வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இவர்களின் காலம் இப்படி!
எங்கள் வீட்டில் என் பேரன்களிடைருந்து என் மடிக் கணணியை காப்பாற்ற நான் படும்பாடு நினைவுக்கு வருகிறது.

இந்தத் தலைமுறை பற்றிய வியப்பு, ஆர்வம் எப்படி சமாளிப்பது என்கிற ஆயாசம் எல்லாம் தெரிகிறது இந்தக் கட்டுரையில்!

பாராட்டுக்கள்!

தாராபுரத்தான் said...

பெங்களுரி்ல் வந்து உங்களைப் போலவே நானும் பூசாரியும் தெிரயாம வாயைக் ெகாடு்தது மாட்டிக்கிட்ேடாம்...சுகமான பதிவு

டிபிஆர்.ஜோசப் said...

என் அப்பா மேல் நான் வைத்த குற்றச்சாட்டுக்களைப் போல என் குழந்தைகள் என் மேல் வைக்காமல் இருக்க தினந்தோறும் போரட வேண்டியதாக உள்ளது.//

இதே ப்ராப்ளம்தான் எல்லார் வீட்டிலும். இதைத்தான் தலைமுறை பேதம் என்கிறார்கள் போலிருக்கிறது? எனக்கு ஐபேட் பயன்பாட்டை எனக்கு படித்துக் கொடுத்தது என்னுடைய பேத்திதான்!