Thursday, May 30, 2013

எதிரி தான் எழுத உதவினார்

அப்பா இறந்து போகும் வரையிலும் அவர் மேலிருந்த கோபம் எனக்குத் தீரவில்லை.  அவர் எந்த துரோகமும் எனக்குச் செய்யவில்லை. அவர் தப்பான ஆளுமில்லை. அவரிடம் வெற்றிலை போடும் பழக்கம் கூட இல்லை.

அவர் வாழ்வில் கடைசி வரைக்கும் எந்த தப்பான பழக்கத்திற்கும் அடிமையானதும் இல்லை.    

மிகப் பெரிய கூட்டுக் குடித்தனத்திற்கு தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அவரின் கடைசி நாள் வரைக்கும் உழைத்துக் கொண்டே தான் இருந்தார். எங்களையும் உழைப்பின் வழியே தான் வளர்த்தார். ஆடம்பரங்களை அண்ட விடாமல் வைத்திருந்தார்.

தவறான பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுத்தார். தான் தன்னுடைய குடும்பம் தன்னுடைய தொழில் என்ற மிகச் சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தார். அதுவே பலமென்று கருதினார். ஊருக்குள் நாலைந்து பேர்களைத் தவிர அவர் நெருக்கம் பாராட்டியது மிகக் குறைவு.  நட்பு வட்டாரம் என்று பெரிய அளவில் இல்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை.  ஆனால் ஊரில் மதிப்பு மிக்க குடும்பம் என்ற பெயரை பெற்று இருந்தார்.

வீட்டில், வயலில், கடையில் வேலை பார்த்தவர்களின் குடும்பத் தொடர்புகள் தவிர வேறு எதையும் அனாவசியமான தொடர்புகளாக கருதியவர். ஊரில் பேட்டை வியாபாரிகளின் சங்கத்திற்கு இரண்டு முறை தலைவராக இருந்தவர்.  அதுவும் இவரின் இரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே மாறிப் மாறி வருவதாக இருக்கும் அந்த பதவியும் குறிப்பிட்ட சுற்றில் இவருக்கு வந்த காரணத்தால் ஏற்றுக் கொண்டவர். குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு இளைஞர்களின் கைக்கு அந்த பதவிக்குச் சென்ற போது இவர் வெளியே வந்து விட்டார்.

கையில் ஒரு மஞ்சள் பை என்பதை தனது அடையாளமாக கருதிக் கொண்டவர். ஒவ்வொரு காசையும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய கற்று வைத்திருந்தவர். வாழ்வில் உயர உடல் உழைப்பே போதுமானது என்று நம்பியவர்.  

ஆடம்பரம் என்ற வார்த்தையில் உணவைத் தவிர அத்தனை விசயங்களையும் கருதியிருந்தார். மகள்கள் கேட்கும் போது மனம் மாறிவிடுவார். காந்தியவாதி என்பதை விட கடைசிவரைக்கும் காங்கிரஸ்வாதியாகத்தான் இருந்தார்.

முதன் முதலாக வலையில் எழுதத் தொடங்கிய போது நாம் எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்த போது எப்போதும் போல அந்த மதிய வேளையில் அப்பா ஞாபகம் தான் வந்தது.  

ஏறக்குறைய அவர் இறந்து எட்டு வருடம் கடந்திருந்த போதிலும் அவர் உருவாக்கிய தாக்கம் குறைந்தபாடில்லை.  ஒழுக்கம் தான் முக்கியத் தேவை என்கிற பெயரில் மிகப் பெரிய சர்வாதிகாரத்தை எங்கள் அனைவர் மீதும் வன்முறைக்குச் சமமாக பிரயோகித்திருந்தார். 

இந்திய சுதந்திர போராட்டத்தில் சொல்லப்படும் ம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்பார்களே அதே போலத்தான்.

அவர் எங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தினார். 

எங்களை மட்டுமல்ல.அவரின் இரண்டு தம்பிகளையும் கட்டுப்படுத்தி தான் வைத்திருந்தார். முன் கோபக்காரர். சொல் பேச்சு கேட்காத போது டக்கென்று கையை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர். அனைவரும் அவர் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இருந்தோம். அவரின் எந்த கட்டளைகளையும் மீறாமல் தான் வாழ்ந்தோம். வளர்ந்தோம். படித்தோம்.  

நான் மட்டும் என்னை ஆளை விட்டால் போதும் என்று வெளியே வந்து விட்டேன்.

நான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் எந்த நிலையிலும் வறுமை எதையும் பார்த்ததில்லை. அடிப்படை வசதிகளுக்கும் எந்த பஞ்சமில்லை.

அப்பா எப்போதும்   கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்.  

ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளைத் தான் கொண்டாடினார்.  பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தூரில் அக்கா படிக்கச் சென்ற போது தயங்காமல் கல்லூரி விடுதியில் தான் சேர்த்தார்.  கல்லூரி அளவில் அக்கா முதல் மதிப்பெண் வாங்கிய போது எவரும் யோசித்தே பார்க்கமுடியாத நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் கொண்டு போய்ச் சேர்த்தார்.  ஆனால் லஞ்சம் என்பதை ஆதரிக்க மாட்டார். தேவையற்ற செலவு என்பதே எங்கும் செய்ய மாட்டார்.  எவரும் எதிர்பார்க்கவும் முடியாது. உறவினர்கள் மத்தியில் ராமநாதன் குடும்பம் சரஸ்வதி குடியிருக்கிற குடும்பம் என்கிற அளவிற்கு மற்றவர்களின் பார்வைக்கு அவர் குறைகளை மீறி ஒளி விளக்காய் தெரிந்தார். 

அப்பாவிடம் வருகின்ற எவரும் இவர் குணங்கள் தெரிந்தே தான் பேசுவார்கள்.  அளவாகத்தான் பேசுவார்.  எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்.  ஆனால் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான குணங்கள் என்னிடம் இருக்க அதுவே எனக்கும் அவருக்கும் நாளுக்கு நாள் தூரங்கள் அதிகமாகப் போக காரணமாகவும்  இருந்தது.

கல்லூரி முடியும் வரையிலும் முழுமையாக ஒட்டவும் முடியாமல் ஓடி ஒளியவும் முடியாமல் சித்தப்பா தான் என் விருப்பங்களுக்கு ஊன்று கோலாக இருந்தார்.  கலையார்வமோ, வேறு எந்த வித விருப்பமோ எதுவும் வீட்டுக்கு அண்டக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்.  அது தான் என் முக்கிய நோக்கமாக இருந்தது.  

படிப்பைத் தவிர மற்ற அத்தனை விசயங்களிலும் கெட்டியாக இருந்த என்னை விரட்டி விரட்டி அடித்த போதும் வீண்வம்புகள் வீடு வரைக்கும் வருவதும் மட்டும் குறைந்தபாடில்லை.  என்னை என்னால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.  என்னைச் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நண்பர்களின் பட்டாளத்தையும் குறைக்கும் வழியும் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தாமதமாகச் செல்லும் அந்த இரவு வேளைகளில் முன்பக்க கதவுகளை தாழ்போட்டு திறக்கக்கூடாது என்ற கட்டளையோடு விழித்துக் கொண்டு காத்திருப்பார்.  இவர் சங்கதி தெரிந்து பின்புறம் கொல்லைப்புறம் இருந்த அந்த முள்காட்டுக்குள் கவனமாக கால்வைத்து ஏறி பின்பக்க கதவு வழியாக வந்து கிசுகிசுப்பாக சகோதரிகளை எழுப்பி உள்ளே வந்து சேரும் போது சரியாக காத்திருந்து கச்சேரியுடன் இடி மின்னல் வெடிக்கும்.  சாப்பாடு இல்லாமல் கண்ணீர் மழையுடன் தான் பல நாள் கழிந்துள்ளது.

ஆகஸ்ட் 25 அவர் இறந்த போது மிகத் தாமதமாகத்தான் அந்த தகவல் எனக்கு திருப்பூருக்கு வந்து சேர்ந்தது.  சென்னையில் இருந்து பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது திருச்சி பேரூந்து நிலையத்திற்கருகே நெஞ்சு வலியினால் அந்த அதிகாலை வேலையில் நொடிப் பொழுதில் இறந்துப் போனார். 

நள்ளிரவில் போய்ச் சேர்ந்த போது அப்பாவின் சடலத்தைப் பார்த்த போது தொடக்கத்தில் எந்த சலனமும் மனதில் உருவாகவில்லை.  இவர் சாவுக்கு நாமும் ஒரு வகையில் காரணமோ என்று கூட தோன்றியது. அவர் எதிர்பார்த்து காத்திருந்த வசதியான பெண்களை எல்லாம் புறக்கணித்து ஒவ்வொன்றும் தள்ளிப் போய் என் சம்மந்தப்பட்ட விசயங்களில் ரொம்பவே வெறுத்துப் போயிருந்தார். 

காரணம் திருப்பூருக்குள் மிகப் போராட்டமாய் வாழ்ந்து வந்திருந்த எனக்கு அந்த வருடம் முதல் படியில் ஏறி ஒரு நிறுவனத்தின் உற்பத்தியின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருந்தேன். அந்த வருடம் தான் அப்பா இறந்திருந்தார். 

நான் கடந்து வந்திருந்த தோல்விகள் ஒவ்வொன்றுக்கும் அப்பா தான் காரணம் என்று உறுதியாக நம்பியிருந்தேன்.  நம்மிடம் இல்லாத திறமைகள் அனைத்து அவர் கற்றுத் தராததே என்பதாக எனக்குள் ஒரு உருவகத்தை உருவாக்கி வைத்திருந்தேன். நம்மை அடக்கி அடக்கி வைத்த காரணத்தால் பல விதங்களில் நாம் பின் தங்கியிருக்கின்றோம் என்பதாகத்தான் ஆற்றாமையில் வெம்பியிருக்கின்றேன்.

அவர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை விரிவாக்கம் செய்திருக்க முடியும்.  அவர் விரும்பியிருந்தால் சிலரைச் சென்று பார்த்திருந்தால் அப்பொழுதே எனக்கு கிடைக்கவிருந்த அரசு வேலையில் சேர்த்திருக்க முடியும். 

எனக்கு மட்டுமல்ல.  அவர் ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உன் திறமையில் வளர் என்பதாகத்தான் வெளியே அனுப்பினார்.   வார்த்தைகளில் தயவு தாட்சண்யம் என்பதே இருக்காது. முக்கியமான விசேடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு தம்பிகளை அனுப்பி விடுவார்.

எவரையும் நம்ப மாட்டார்.  எவரிடமும் அறிவுரையும் கேட்க மாட்டார்.  தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மற்றவர்களைப் பற்றி கவலைப்படவும் மாட்டார். 

தான் உண்டு. தன் வேலையுண்டு என்பதைத்தான் தன் வாழ்க்கை நெறிமுறையாக வைத்திருந்தார். காலத்தோடு ஒத்துப் போக முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் உள்ளூருக்குள் வந்த புதியவர்கள் ஒவ்வொருவரும் வளர வளர இவரால் தன்னை வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை.  

தன் இயல்புகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.  

எவருக்கும் மனதறிந்து துரோகம் செய்யக்கூடாது என்பதை முக்கியமாகக் கொண்டவரின் கொள்கைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை தந்த போதிலும் காலத்திற்கேற்ப புதிய முயற்சிகள் கூட தேவையில்லை என்பதாக வாழ்ந்தவரின் கொள்கைகள் தான் எங்களுக்கு அதிக எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது.  தானும் வளராமல் எங்களையும் அண்ட விடாமல் தான் சேர்த்த சொத்துக்களை அடைகாத்தார். நான் ஊரில் பார்த்த முக்கால்வாசிப்பேர்கள் மூன்று தலைமுறைகளாக காத்து வந்த சொத்துக்களை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறிய போதிலும் இன்று வரையிலும் அவர் சம்பாரித்த எந்த சொத்துக்களும் சேதாரம் இல்லாமல் தான் இருக்கின்றது.  அவர் தம்பிகளுக்கு பிரித்தது போக இன்றும் அப்படியே இருக்கின்றது.

அப்பா இறக்கும் வரையிலும் உணவு தான் வாழ்க்கை.  ருசி தான் பிரதானம் என்பதான சிறிய வட்டத்திற்குள் பொருந்திக் கொண்ட அவருக்கும் உலகத்தை அளந்து பார்த்து விட வேண்டும் என்று போராடிப் பார்த்த எனக்கும் உருவான பிணக்குகள் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை.

கால் நூற்றாண்டுகள் காலம் அவரை வெறுத்துக் கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடி தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் முதன் முறையாக மரியாதை உருவானது.  

குழந்தைகளின் மருத்துவத்திற்காக அலைந்த போது தான் அவரின் உண்மையான ரூபம் புரிந்தது.  

குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற போது தான் எத்தனை அறிவீலியாக இருந்துள்ளோம் என்பதை உணர்ந்து பார்க்க முடிந்தது.

இன்று அம்மா வாழ்ந்திருந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகின்றது. அவரின் அசாத்தியமான பொறுமை இன்று என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  அவர் மிகப் பெரிய பட்டாளத்திற்கு சமைத்துப் போட்டு உழைத்த உழைப்பு இன்னமும் நாம் உழைக்க வேண்டும் என்று உந்தித் தள்ளுகின்றது. வீட்டுக்கு மூத்த மருமகளின் கொடூரமான சகிப்புத்தன்மையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் மனோநிலையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது.

குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை.  ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தை காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது.  அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது.  குடும்பத்தினர் திருமணத்தை ஏற்பாடு செய்து உறுதி செய்த போது அப்பா இறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.  என்னை விட்டு விடக்கூடாது என்று மாமனார் அவசரமாக இருந்தார்.  ஏதோவொரு வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். மாமனாரிடம் ஒரு வருடம் முழுமையாக முடியட்டும் என்று காத்திருக்கச் சொன்னேன்.

ஊர்ப் பழக்கத்தில் தாத்தா அப்பா பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை.  ஆனால் ஆண் குழந்தைகள் வந்தால் என்னைப் போல இருந்து விடுவார்களோ என்று இயற்கை நினைத்ததோ தெரியவில்லை. ஒன்றுக்கு மூன்றாக பெண் குழந்தைகள் வந்து சேர இன்று மூவரும் எங்களை கொண்டாடுகின்றார்கள்.

இப்போது எங்கள் குழந்தைகள் தான் எனக்கு அப்பாவாக இருக்கின்றார்கள். 

காரணம் இவனை திருத்தவே முடியாது என்று புலம்பியவரின் பேத்திகள் தான் இன்று என்னை பேதியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று வளர்த்தவரின் பேத்திகள் இன்று கேள்விகளால் துளைத்தெடுக்கின்றார்கள்.  உங்க காலம் வேறு. எங்க காலம் வேறு என்று மல்லுக்குச் சரிசமமாக இருக்கின்றார்கள்.

அமைதியாய் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை என்று உணர்த்திய அப்பாவின் வாழ்க்கையின் தத்துவங்களைத்தான் இப்போது நானும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம் பல சமயம் குழந்தைகள் கேட்கும் உண்மையான அக்கறையான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அழகாய் ஒதுங்கிவிடத்தான் தோன்றுகின்றது.  ஏன் எதற்கு எப்படி என்று கேட்டுப் பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நிலைக்கு இப்போது மூன்று பக்கத்திலிருந்து சூறாவளியும் சுனாமியும் ஒன்று சேர தாக்கிக் கொண்டேயிருக்கிறது.  வீட்டில் என்னால் சமாளிக்க முடியல என்று சொல்லும் அளவுக்கு தினந்தோறும் வாழ்க்கை அதகளமாக போய்க் கொண்டேயிருக்கிறது.

அன்று அப்பாவிடமிருந்து ஒதுங்கிச் சென்ற கால்கள் இன்று குழந்தைகளின் மாறிக் கொண்டேயிருக்கும் எதிர்பார்ப்புகளைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றது. 

வலைதளம் அறிமுகமாகி, எழுதத் தொடங்கிய பிறகு என்னைப் பற்றி எழுதிப் பார்த்த போது குழந்தைகளின் வளர்ச்சியை, அவர்கள் கடந்து வந்த காலடித் தடத்தினை எழுதிக் கொண்டே வந்தேன்.  

பலருக்கும் இந்த அனுபவங்கள் பிடித்தது என்பதை விட இது போலவே நாங்களும் வளர்க்க ஆசைப்படுகின்றோம். உங்கள் எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொள்ள முடிகின்றது என்றார்கள். மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளாமல் உங்கள் அனுபவங்கள் கற்றுக் கொடுத்த விசயங்களை எழுதுவது எங்களுக்கு பிடிக்கின்றது என்றார்கள்.

விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு புரிந்துணர்வு இந்த வலையுலகில் எனக்கு கிடைத்தது. காரணம் அது என் அப்பா எனக்குள் உருவாக்கிய தாக்கமது.

வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்படையில் அன்புக்கு ஏங்கி தவிக்கும் மனம் உள்ளவனமாகத்தான் இருப்பான்.

அன்பென்பது பகிரப்படும் போது தான் அதற்கு உயிர்ப்பு வருகின்றது. உள்ளேயே வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு எந்த பலனும் இல்லை. அந்த அன்பு சிலருக்கு மனைவி மூலம் கிடைக்கக்கூடும்.  எல்லா சமயத்திலும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதும் இல்லை. அது பரஸ்பரம் சரியான விதத்தில் புரிந்து கொள்ளும் போது இயல்பாக இருக்கும்.  

ஒரு பக்கம் கூடி மறுபக்கம் குறைந்தால் அதிலும் பிரச்சனை உருவாகி அது விஸ்வரூபம் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளதால் ஏறக்குறைய குடும்ப வாழ்க்கையென்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். கால மாறுதல்கள் தினந்தோறும் வரவேற்பரையில் கொண்டு வந்து கணக்கற்ற விஷங்களையும் விதைத்துக் கொண்டேயிருப்பதால் கண்கொத்தி பாம்பாகத்தான் இந்த வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது.

பேசும் பேச்சு முதல் நம்முடைய அன்றாட நடவடிக்கை வரையிலும் கவனத்தோடு வாழ் வேண்டியுள்ளது. 

ஆனால் நம் சமூகத்தில் குழந்தைகள் தான் கணவன் மனைவியை சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு சமயத்திலும் உருவாக்கி வைக்கின்றது. நான் இங்கே பார்த்த வரையிலும் அவரவர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது தான் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உண்மையான அக்கறை உருவாகின்றது.

காரணம் நான் நீ என்ற ஈகோ குழந்தைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக  அழிக்கப்படுகின்றது   நம்மால் குழந்தைகள் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தினால் அமைதி உருவாக அதுவே உறவுச் சங்கிலியின் தன்மை கெட்டுப் போகாதவாறு இருந்து விடுகின்றது.

குழந்தைகளின் வளர்ச்சியின் மூலம் இங்கே பல கணவன் மனைவியின் உண்மையான காதல் அனுபவமும் மீண்டும் துளிர்விடத் தொடங்குகின்றது.

குடிகார கணவன் குழந்தையின் மேல் உள்ள பாசத்தினால் தன் இயல்புகளை மாற்றிக் கொண்ட பலரையும் பார்த்துள்ளேன்.  மகள் வளர்ந்துவிட்டாள் என்ற பயத்தில் ஊர் மேய்ந்த மனைவி மாறிய தன்மையும் பல பாடங்களைத் தந்துள்ளது.   இங்கே குடும்ப பாசம் என்ற ஒரு வார்த்தை தான் மேலானதாக இருக்கிறது. இதுவே தான் நம் இந்திய நாட்டை ஒரு சங்கிலி போல இன்னமும் இணைத்து வைத்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.  

வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கியது முதல் இன்னமும் என் எழுத்துக்களை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் வரையும் அத்தனை பேர்களும் இது போன்று நாங்களும் குழந்தைகளின் அனுபவங்களை எழுத வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என்று சொல்லி இருக்கின்றனர்.

ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் விருப்பங்களை, பாராட்டுக்களை, ஆச்சரியங்களை  விமர்சனத்தின் வாயிலாக தெரிவித்தும் உள்ளார்கள்.

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இங்கே மூவரும் கல்லூரிப் பக்கம் சென்று விடுவார்கள்.  அப்போது அவர்களின் உலகம் வேறுவிதமாக இருக்கக்கூடும்.  எண்ணங்கள் முழுமையாக மாறியிருக்கும்.

இன்று காட்டும் அன்பு கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கலாம். 

அந்த உலகத்தில் நான் (நாங்கள்) இருப்பேனா என்று தெரியாது. என்னளவில் என் அப்பாவைப் போல சரியானதை மட்டும் இவர்களுக்கு செய்து கொண்டிருக்கும் விசயங்கள் அவர்கள் மனதில் தப்பு அல்லது வன்முறை போல தோன்றியிருக்கக்கூடும்.

இப்போது வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையில் கூட உள்ளே வைத்திருக்கக்கூடும்.

காரணம் நானும் அப்படித்தானே யோசித்துருந்தேன்..

அப்போது நான் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் கூட என் குழந்தைகள்  இந்த எழுத்துக்களை படிக்கக்கூடும். 

நான் என் அப்பா மேல் வைத்திருந்த வெறித்தனமான கோபத்தைப் போல ஒருவேளை எங்கள் குழந்தைகள் என் மேல் வைத்திருந்தால் அப்போது அவர்கள் மனதில் தோன்றக்கூடிய கேள்விகளுக்கு சில பதில்கள் இந்த எழுத்துக்கள்  மூலம் அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும்?.

இன்னமும் நிறைய எழுதி வைப்பேன்.


ஆட்டம் காணும் அஸ்திவாரம்


வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்


மிதி வண்டி - வீரமும் சோகமும்


சொம்பு இல்லாத நாட்டாமை



தினந்தோறும் மலரும் பூக்கள் 2011


சாமி கண்ணை குத்திடும்


ஊரை திருத்தப் போறீங்களா?



நான் திருந்தப் போவதில்லை.


எந்திரன் உருவாக்கும் கல்வி

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏழு தலைமுறை ஒரு குடும்பம் சீராக சிறப்பாக (எல்லா விசயத்திலும்) வாழ்ந்தது யாராவது உண்டா...? என்று தேடிப் பாருங்கள்... கிடைப்பது அரிது...

பதிந்து வையுங்கள்... வாழ்த்துக்கள்...

எம்.ஞானசேகரன் said...

மிக நீளமான பதிவு. இனிதான் போறுமையாக படிக்கவேண்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் தந்தையைப் பற்றி ஒரு ஆய்வே செய்து விட்டீர்கள். அவரைப் போல இன்று யாரும் தன் குழந்தைகளை நடத்த முடியாது. நேரடியாகவே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அப்படிப் பலர் அந்தக் காலக் கட்டத்தில் இருந்தனர். தான் செய்வதுதான் முற்றிலும் சரி. அதை மாற்றிக கொள்ளக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தனர். ஆனாலும் அவருடைய நேர்மையும் உழைப்பும் ஆச்சர்யப் படவைக்கிறது. இன்னொரு முறை படிக்க வேண்டும்.

இராஜராஜேஸ்வரி said...

குடும்பம் ஒரு கதம்பம் ..!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நிதர்சனம் .

எம்.ஞானசேகரன் said...

மிக அருமையான தோடர். வாழ்க்கை அனுபவங்களை இதை விட சிறப்பாக எழுதமுடியாது. உறவுகள் உறவுப் பிணக்குகள் என்றுமே தீராதவை. நம்முடைய சுய வாழாமல் பிறருக்காகவே வாழப் பழகிவிட்டோம். நாம் நாமாக இருப்பது பல நேரங்களில் சாத்தியமாவதில்லை. உங்கள் தந்தையார் அவராகவே வாழ்ந்திருக்கிறார். யாருக்காவும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவருக்காக எல்லோரும் மாற வேண்டும் என்பதுதான் நிக்கலாகியிருக்கிறது.

இனி வளரும் தலைமுறைகளை எதைக்கொண்டும் வேலிபோடமுடியாது என்பது மட்டும் புரியத்தொடங்கியிருக்கிறது.

எம்.ஞானசேகரன் said...

எழுத்துபிழை உருவாகிவிட்டதற்காக வருந்துகிறேன். இரண்டாவது வரியில் 'நாம் சுயமாக வாழாமல்' என்று வந்திருக்கவேண்டும். ஆறாவது வரியில் 'சிக்கலாகியிருக்கிறது' என்று வந்திருக்கவேண்டும். வேகமாக தட்டச்சு செய்யும்போது வந்த பிழை இது.

vishwa said...

உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் உங்கள் எதிர் காலத்தின் மேல் அக்கரையுடன் தான் இருந்திருக்கிறார்.

"குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தை காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது. அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது."

உணர்ந்து விட்டீர்கள் அல்லவா குற்ற உணர்வை விடுங்கள் "வாழ்க வளமுடன்"

karunakaran said...

sir, ungal appavaipolave than enathu appavum irundar. mutrilum engal veetin nadanthai polave iruku. vazthukkal

arul said...

wounderful expressions

ஊரான் said...

பெற்றோர்களின் நடத்தை தனிநபர் சார்ந்ததாக மட்டும் பார்ப்பதைவிட அதற்கான சமூகப் பின்னணியையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது கோபம் நியாயமானதா என்பதை உணர முடியும். கோபத்தை செலுத்த வேண்டிய திசையும் புரியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் பார்வைக்கு : http://www.madrasbhavan.com/2013/06/blog-post.html

Unknown said...

\\வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்படையில் அன்புக்கு ஏங்கி தவிக்கும் மனம் உள்ளவனாகத்தான் இருப்பான்.//

மிகவும் உண்மை.

Unknown said...

பாடம்-----

Ranjani Narayanan said...

உங்கள் அப்பாவைப் பற்றிய சிந்தனைகள் எல்லோரையுமே சிந்திக்க வைத்திருக்கிறது. வெளிப்படையான உங்கள் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன.
உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன். ஆனால் சிலவற்றிற்கு மட்டுமே பின்னூட்டம் எழுதுகிறேன். ஏனெனில் படித்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறேன். எதுவுமே எழுத தோன்றுவதில்லை.
இதுவே உங்கள் வெற்றி என்று தோன்றுகிறது.
பாராட்டுக்கள்!

ஜோதிஜி said...

அனைவருக்கும் மிக்க நன்றி. நம்முடைய உண்மையான அனுபவங்களை சொல்லும் தைரியம் தான் நாம் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை உணர வைக்கும் என்ற கருத்தில் இன்று வரையிலும் உறுதியாக இருக்கின்றேன்.

ஜோதிஜி said...

மிக்க நன்றிங்க.