Thursday, November 08, 2012

மின்சாரக் கனவு - 4 தமிழ்நாட்டின் (மின்சார) பொற்காலம்

தொடக்கம்

முதல் பகுதி

இரண்டாவது பகுதி

மூன்றாவது பகுதி

இப்போதுள்ள மின்சார பற்றாக்குறையில் தமிழ்நாடு தவித்துக் கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் நமக்கு சில பழைய மகிழ்ச்சியான நடைமுறையில் சாத்தியமான விசயங்களையும் பார்த்து விடுவது நல்லது. 

தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் பொற்காலம் ஒன்று இருந்தது.  முழுமையான தன்னிறைவு பெற்றதாக நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியமும்  இருந்தது என்றால் நம்ப முடியுமா?

1977 ஆம் ஆண்டு திரு. மெரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா கட்சியானது மத்தியில் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தைச் சேர்ந்த பா.ராமச்சந்திரன் மத்திய மின்துறை அமைச்சராக பதவியேற்றார். 

அவருடைய முயற்சியால் தேங்கிக் கிடந்த தூத்துக்குடி அனல் மின் நிலையப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.  1979 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தூத்துக்குடியின் முதல் 210 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் தன் உற்பத்தியை தொடங்கியது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அங்கு 210 மெகாவாட் திறனுள்ள மூன்று அனல் மின் மையங்கள் தம் உற்பத்தியைத் தொடங்கின.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் கூட்டப்பட்டதுடன் கட்டுமானத்தில் இருந்த மேட்டூர் அனல் மின் நிலையமும் திட்டமிட்ட காலத்திலேயே தன் உற்பத்தியைத் துவங்கியது. அதன் நான்கு மையங்களும் ஒன்றன் பின் ஒன்றாக 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை தம் மின உற்பத்தியை தொடங்கின.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி உயர காரணமாக இருந்தவர் ஒரு ஃபோர்மென் என்றால் நம்பமுடிகின்றதா?   

அங்கு வரும் நிலக்கரியில் அதிக அளவு கற்கள் கலந்து இருப்பதை தவிர்த்து சுத்தமாக்கினால் போதும் என்று அந்த ஃபோர்மென் சொல்ல அப்போது பணியில் இருந்த ராஜரத்தினம் என்ற செயற்பொறியாளர் அவர் யோசனையை ஏற்று செயலாக்கத்தில் காட்டினார்.  சொன்னபடியே அந்த அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முதல் முறையாக தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட 68,49 சதவிகிதம் என்ற இலக்கை எட்டியது.

மனிதர்களை பதவிக்கு அப்பாற்பட்டு மதித்து அவர்கள் யோசனைகளை கேட்கும் போது தான் பல சாதனைகள் பல நிறுவனங்களில் நடந்து கொண்டிருக்கின்றது.

1989 ஆம் ஆண்டில் வட சென்னை அனல் மின் நிலையத்திற்காக தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை வி.ஜி.பி. கோல்டன் பீச் என்ற நிறுவனம் தனக்கு சொந்தமானது என்று சாதகமான நீதிமன்ற தீர்ப்பு பெற்று இருந்த போதிலும் 1989 ஆம் ஆண்டு பதவியேற்ற அரசு  இந்த பிரச்சனையில் நேரிடையாக தலையிட்டு இடத்தை உடனடியாக பெற்றுத் தந்தது.

அங்கு கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப் பெற்றது.  அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள்ளாக வரிசையாக மூன்று யூனிட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

மத்திய அரசுக்க சொந்தமான நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணியும் 1986 ல் தொடங்கி 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட 7 மையங்கள் இருந்தது.  

மொத்ததில் 1470 மெகாவாட் திறன் கொண்ட இந்த நிறுவனத்திலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டது வெறுமனே 465 மெகாவாட் மட்டுமே.

இந்த இடத்தில நம் தமிழர்கள் எந்த அளவுக்கு சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இரண்டு விசயங்களை பார்த்து விடலாம்.  


இப்போது கூடங்குளம் விவகாரத்தில் பலரும் கூடங்குளம் திறந்து விட்டால் சொர்க்கலோகம் தெரிந்து விடும் என்று குதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களுக்கு எந்த லோகம் கிடைக்கும் என்பதை இந்த உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.             

மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேசன் என்ற பெயரில் தான் கல்பாக்கம் அணு மின் நிலையம் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அணு உலைகளின் முதல் யூனிட் தன் மின் உற்பத்தியை ஜுலை 1983 ஆம் ஆண்டு தொடங்கியது.  இரண்டாவது யூனிட் நவம்பர் 1986 ல் தொடங்கியது.  இவை இரண்டும் முறையே 235 மெகாவாட் திறன் உள்ள அணு உலைகள் ஆகும். 

1983 முதல் 2007 வரையிலும் 25 ஆண்டுகளில் 50 சதவிகித அளவை இரண்டு ஆண்டுகளில் எட்டிய இந்த அளவு படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.  அதாவது மொத்தமாக 25 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கு 30 சதவிகிதத்திற்கு கீழாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. நெருக்கடியான காலகட்டங்களில் கூட இந்த அணுஉலையால் எந்த உதவியும் நமக்கு கிடைத்தபாடில்லை. 

ஒப்புக்கு சப்பாணி என்று சொல்வோமே அதைப் போலத்தான் இந்த அணுஉலைகள்.

முறைப்படி கவனித்தார்களா? கவனிக்க வேண்டியவர்களை மட்டும் கவனித்தார்களா என்பது ஆண்டவனுக்கு காட்டும் வெளிச்சத்தில் மட்டுமே உணர்ந்து கெர்ள்ள முடியும்.

நன்றாக புரிந்து கொள்ளவும்.

இந்திய அரசாங்கம் கொண்டு வர நினைக்கும் அணுஉலைகள் என்பது மக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்திற்காக அல்ல. அதற்கு அப்பாற்பட்ட பல விசயங்கள் உள்ளது.  மின்சாரம் என்பது முன்னால் சொல்லப்படுகின்ற ஒரு பம்மாத்து விசயம்.  அவ்வளவுதான். இந்த அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் தான் எதிர்கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை அசைத்துப் பார்க்கப் போகின்றது என்பதை வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம்.

அடுத்து மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் பற்றி பேச வேண்டும்.  

தற்போது முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் ஏறக்குறைய கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்.  குஜராத்திடம் இருந்து நாங்கள் வாங்கிக் கொள்கின்றோம். மின் தடத்தை ஒதுக்கித் தாருங்கள் என்றாலும் காங்கிரஸ் அரசாங்கம் புதுப்புது காரணங்களை சொல்லிக் கொண்டு தவிர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

இந்த பாரபட்சம் இன்று நேற்றல்ல.  தொடக்கம் முதலே இப்படித்தான் தமிழகம் என்றாலே மத்தியில் உள்ள அரசாங்கம் நடந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொரு சமயமும் ஆட்சிகள் மாறும்.  ஆனால் காட்சிகள் மட்டும் எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

மத்திய அரசின்  மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது காட்கில் திட்டம் (GADGIL FORMULA) என்பதன் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகின்றது.  

ஆனாலும் பல சமயங்களில் அந்தத் திட்டம் பின்பற்றப்படுவதிலலை.  

உதாரணமாக 2000 ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் உள்ள கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் மத்திய அரசின் என்டிபிசி நிறுவனத்தின்  புதிதாகத் தொடங்கப்பட்ட 1000 மெகாவாட் திறனுள்ள சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் உற்பத்தியில் பிற மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதுமே ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.  இது போன்று  தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே முழுமையாக வழங்கிடும் முன்னுதாரணம் எந்த காலத்திலும் நடந்ததே இல்லை.

ஆனாலும் 1983 முதல் 90 காலகட்டம்  தமிழ்நாடு மின் வாரியம் எடுத்த தொடர் நடவடிக்கையினால் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்தது. குறிப்பாக 16.10.1992 ஆம் ஆண்டு மின்சாரத்தில் தமிழ்நாட்டில் முழுமையான மின் தட்டுப்பாடு நீங்கி தன்னிறைவு பெற்றதாக விளங்கியது.

காரணம் என்ன?  செயல்பட அனுமதித்தார்கள். நம்மவர்கள் ஜெயித்தார்கள். 

இப்போது என்ன நடக்கின்றது?

தனக்கு வருவாய் தரும் துறைகளை மிரட்டி வாங்கிக் கொள்ளும் கட்சிகள் இருப்பதால் மத்திய அரசாங்கமும் எலும்பு துண்டை போட்டால் போதும் என்று ஏளனமாகத்தான் தமிழகத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

கதாநாயகன் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டேயிருந்தால் கதை நன்றாகவா இருக்கும்.  வில்லன் ரூபத்தில் வந்தது தான் புதிய பொருளாதார கொள்கை.

புதிய பொருளாதாரக் கொள்கை பல புதிய வெளிநாட்டு பொருட்களையும் நம்மிடையே கொண்டு வந்து சேர்த்தது. நம்முடைய அடிப்படை வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் என்பதையும் தாண்டி ஆடம்பரத்திற்கு என்றொரு சூழ்நிலையும் உருவானது.

விளம்பரங்கள் மூலம் புதிய புதிய மின்சாதன பொருட்கள்  நடுத்தர மக்கள் ஒவ்வொருவரையும் சுண்டியிழுக்கத் தொடங்கின.

தேவையான, தேவையற்ற அத்தனை பொருட்களும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அணிவகுக்கத் தொடங்கியது. மின்சாரத்தின் தேவைகள் அதிகமாகத் தொடங்கியது. 

புதிய பொருளாதார கொள்கைகளை தீட்டியவர்களுக்கு முழுமையாக தெரிந்து இருக்கும் தானே? 

எதிர்கால மின்சாரத் தேவை என்பதை தங்கள் கணக்கில் வைத்திருப்பார்கள் தானே?

வரு முன்னர் காக்க வேண்டியவர்கள் தெளிவாக காய் நகர்த்தினார்கள். எந்த புதிய மின் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அணு உலைகள் சார்ந்த திட்டத்திற்கே முன்னுரிமை தந்தார்கள். வேறு எதையும் நினைத்துப் பார்க்கக்கூட தயாராக இல்லை. 

மாநில அரசாங்கத்தையும் செயல்படுத்த விடவில்லை. இனி வரும் காலங்களில் புதிய பொருளாதார கொள்கையின்படி தனியார் நிறுவனங்கள் மூலம் மட்டுமே இனி மின்சாரம் வாங்க வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டு அதன் பாதையில் கொள்கைகள் வகுக்கப்பட்டது. 

மாநில மின்சார வாரியம் நோய் வாய்ப்பட்டது. சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படவில்லை.  

தனியார்கள் வந்து மின் உற்பத்தியை தொடங்கி விடுவார்கள்.  உங்கள் பிரச்சனைகள் அத்தனையும் தீர்ந்து விடும் என்றார்கள்.  அதுவரைக்கும் காற்று வாங்கிக் கொண்டிருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இடையே தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் காற்றாலை மூலம் தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை போக்க முடியுமா? என்ற சோதனை முயற்சியும் செய்து பார்க்கப்பட்டது. 

முதல் முறையாக 1986 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முல்லைக்காடு என்ற இடத்தில் பரிட்சார்ந்த ரீதியில் 10 காற்றாலைகள் கூட துவங்கப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொன்றையும் சிறப்பாக நடத்தினால் தானே அத்ன் பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும். தனியார் மின்சாரம் தரப் போகின்றார்கள்.  உங்களுக்கு ஏன் இந்த ரிஸ்க் என்று சொல்ல நம்மவர்கள் நிதானமாக ரஸ்க் சாப்பிட தொடங்கினார்கள்.

உருவாக்கப்பட்ட கொள்கைகள் ஒவ்வொன்றும் கொள்ளையடிக்க பயன்பட்டது.  இன்று வியர்வை வந்தால் உடல் நலத்திற்கு நலமாக இருக்கும் என்ற சூழ்நிலையில் வெந்து புழுங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஏனிந்த அவலம்?

உலகத்தில் உள்ள முதலாளித்துவ நாடுகளில் பல தனியார் நிறுவனங்கள் மூலம் நல்ல விசயங்கள் நாட்டுக்கு நடந்து கொண்டு தானே இருக்கின்றது என்ற கட்சியை சேர்ந்தவரா நீங்கள்?

தமிழ்நாட்டில் உள்ளே வந்த தனியார் மின் நிறுவனங்களை, அதன் செயல்பாடுகளை, பின்னங்கால் பிடறி தெரிய ஓடியவர்களைப் பற்றி படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்க..............

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்..........................

வினவு தளத்தில் உள்ள கட்டுரை

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாவற்றையும் போட்டு தாக்கிட்டீங்க... (உண்மைகளை)

அந்த பொற்காலம் வராது போலிருக்கே...

Tamil Newspaper said...

மிகவும் நல்ல பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி.