Sunday, June 06, 2010

நாறும் உள்ளாடைகள்

ஈழம் "தொடர்"பான செய்திகளின் முடிவுரைக்கு இதை சொடுக்கவும்.


" எனக்கும் படிக்கனுன்னு தான் ஆசை.  பனிரெண்டாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் 980. எங்க கிராமத்து பள்ளிக்கூடத்துல எல்லோருமே பாராட்டுனாங்க. என்ன பிரயோஜனம். எங்க ஊர்லயிருந்து திருவண்ணாமலை போய் கல்லூரியில் சேர்றதுக்கு வழியுமில்லை. அப்பா கையில காசுமில்லை. அண்ணன் கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்துல தனியே போயுடுச்சு. தம்பியாவது படிக்கட்டும்ன்னு திருப்பூர் வந்துட்டேன்"

அந்த பெண்ணிடம் பதினெட்டு வயசுக்கான எந்த செழிப்பும் உடம்பில் இல்லை.  கண்கள் குழி விழுந்து கருவிழிகளில் நிரந்தர மையிடாத கோடுகளாய், கதுப்புகள் ஓட்டிப்போய், வாலிப இயல்பான குணங்கள் மாறிப் போயிருந்தது.  தினந்தோறும் 12 மணிநேரம் நின்று கொண்டே பார்க்க வேண்டிய வேலையில் இருக்கிறார். தைத்து வரும் ஆய்த்த ஆடைகளில் நீட்டிக்கொண்டுருக்கும் பிசிர்களை வெட்டி, தரம் பிரித்து சோதித்து மற்றொருவரிடம் கொடுக்க வேண்டும். இங்கு எந்த முன் அனுபவமும் இல்லாமல் வருபவர்களுக்கென்று முதலில் ஒதுக்கப்படும் வேலை இது. ஆடைகளை நிறம் அளவு பார்த்து கட்டிய கட்டில் தனிப்பட்ட எண் அடையாளமாக போடப்பட்டுருக்கும்.  பெட்டியில் ஏறுவது வரைக்கும் ஒவ்வொரு ஆடைகளையையும் மிகக் கவனமாக கண் கொத்தி பாம்பாக பார்க்கப் படவேண்டும்.

தரத்தினை சோதிப்பவர்களின் கையில் ஒரு ஆடை கிடைத்தாலும் மொத்த நிகழ்ச்சியும் மாறிப் போய் விடும் மொத்தமாக உள்ளே பணிபுரிந்து கொண்டு இருப்பவர்களுக்கு தவறு செய்தவர்கள் வேடிக்கைப் பொருளாக மாறிவிடுவர்.  பார்த்துக்கொண்டுருக்கும் மற்ற பெண்கள் காதில் வந்து விழும் வார்த்தை களுக்கு மதிப்புரைகள் எழுத தனியாக ஒரு புத்தகம் வேண்டும். தயவு தாட்சண்யம் இல்லாமல் நாறத்தனமாக வந்து விழும் வார்த்தைகள்.  கோடிகளை போட்டுவிட்டு கொட்டக் கொட்ட இரவு பகல் பாராமல் முழித்துக் கொண்டுருக்கும் நிறுவன முதலாளியின் சார்பாளர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள்.
காலை எட்டரை மணிக்கு உள்ளே நுழைய வேண்டும்.  வேலை இருந்தால் இரவு 9 மணிக்கு வெளியே வர முடியும். வேலை நெருக்கடி அதிகமென்றால் நடுசாமம் 1 மணி வரைக்கும் தொடரும். இன்னும் நெருக்கடி அதிகமாகும் அதுவே அதிகாலை வரைக்கும் தொடரும். என்ன கிழமை? இப்போது என்ன நேரம்?  எவருக்குத் தெரியும்? 

பள்ளிக்கல்வியும் குறுகிய கிராம சிந்தனைகளையும் உடைய ஒவ்வொரு இளைஞர் இளைஞிகள் தொடங்கி, வாழ்க்கையில் இனி எப்படி மீதி காலத்தை வாழப் போகிறோம் என்று இறுதியில் இருப்பவர்கள் வரைக்கும் தினந்தோறும் இங்கு வந்து இறங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். வேறு வழியே தெரியாமல் தனக்கான வாழ்க்கையின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தினந்தோறும் வந்து கொண்டுருக்கிறார்கள்.  விளையாத நிலத்துடன் போராட முடியாத அவலம் தொடங்கி, வீட்டு மனைக்காக விற்க்கப்பட்ட இடம் வரைக்கும் ஆளை விட்டால் போதும் என்று இங்கு வந்து இந்த அவஸ்த்தை வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 
  
ஏற்றுமதிக்கான வேலையென்பதும், தொழில் நகர சமூகமென்பதும் எப்படி இருக்கும் என்பது தெரியாமலேயே திடீர் என்று உள்ளே தொம்மென்று குதிக்கும் பெண்களும் ஆண்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள தங்கள் போராட்டத்தை இங்கு தான் யுத்தம் போல் தொடங்குகிறார்கள். 

பள்ளிக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுத்து சம்பாரிக்கப்போறேன் என்று ஓடி வந்தவர்களும், படிப்பை தொடர முடியாதவர்களும், தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் முடித்து விட்டு குடும்பத்தினரின் திட்டுகளை மிச்சப்பபடுத்த உள்ளே வந்தவர்கள் படும்பாடு அவஸ்த்தையானது. பிடிக்காத தினந்தோறும் வெறுக்கும் சூழ்நிலை.  ஆனால் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.  இரத்தம் உறியும் அட்டைப்பூச்சி போல் முறையற்ற நிர்வாகத்தில் முசுடுகளின் அக்கிரம அநியாயங்களை தாண்டி மேலேறி வரவேண்டும்.  வாங்கிய பட்ட அறிவும் மறந்து போயிருக்கும். அதற்குள் மொத்த இளமையும் பறி போயிருக்கும்.

ஒவ்வொரு தொழில் நகரத்திற்கும் வெவ்வேறு முகமுண்டு.  பணம் அதிகமாக புழங்கும் இந்த திருப்பூரில் மனித மனத்தை தேடுவது முட்டாள்தனம். தொழிலாளர்களுக்கு கல்வித் தகுதி ஒரு பெரிய விசயமில்லை.  உழைக்க வலு வேண்டும்.  உண்மையாக தொடர்ச்சியாக காட்ட வேண்டும்.  ஆனால் பட்டதாரிகள் தேடும் வாழ்க்கை தான் இங்கு பரிதாபத்தில் முடிகின்றது.  குறிப்பாக தொழில் நுட்ப கல்லூரி பட்டதாரிகள், உயர் கல்வி கற்றவர்களின் மொத்த தகுதிகளும் இது போன்ற சமூக வாழ்க்கையை தொடங்கும் போது தான் அவர்களுக்கே தங்களுடைய முழுத் தகுதியும் வெளியே தெரிகிறது. உள்ளே இறங்கி உழைப்பைக் காட்ட முடியாது.  தொழிலாளியாக மாற கௌரவம் இடம் தராது.  அலுவலக பணிகளில் வாங்கும் குறைந்த பட்ட ஊதியத் தொகையில் வருடம் முழுக்க பணிபுரிந்தாலும் தன்னை காப்பாற்றிக்கொள்வதே பெரும்படாக இருக்கிறது.  ஆங்கிலமும் தெரியாமல் வேலையும் புரியாமல் கடனுக்கு ஓட்டும் வாழ்க்கையாக வாழத் தொடங்குகிறார்கள்.  நடுத்தர வர்க்கம் போல் மொத்தத்தில் இயல்பாக நடுங்கும் வர்க்கமாக மாறிப் போய்விடுகிறார்கள்.  பல சமயம் ஆளை விட்டால் போதும் என்று 18 மணி நேர வேலைக்குப் பயந்து கிளம்பி வந்த இடத்திற்கே ஓடிப் போய் விடுகிறார்கள்.
தென் மாவட்டத்தில் தொடங்கி தர்மபுரி சுற்றியுள்ள வறண்ட பிரதேசங்கள் தஞ்சாவூர் தொடங்கிய கிராமங்கள் இராமநாதபுரம் வரைக்கும் வாழும் மக்களுக்கு இந்த ஆடைகள் உலகம் என்பது அற்புதமான வாழ்க்கை தரும் காமதேனு. சுரக்க சுரக்க பால் வந்து கொண்டுருப்பது போல் உழைக்க உழைக்க உயர முடிகிறதோ இல்லையோ உண்ண உறங்க உடுக்க பிரச்சனைகள் குறைகிறது.

வளரும் உலகத்தில் நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் திறன் பொறுத்து ஒவ்வொரு தொழில் நகரத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தீர்மானிக்கப்படுகிறது. பூமிப்பந்தின் ஏதோவொரு இடத்தில் நடந்த பூகம்பம் வரைக்கும் அத்தனை பாதிப்புகளும் இந்த ஆடை உலக நிறுவனத்தை பாதித்து விடுகிறது.  தொழிலாளிகள் படும் பாடு சாப்பாட்டுக்கானது.  முதலாளிகள் நிலமையே படு மோசமானது.

சீனா, பங்களாதேஷ்,வியட்நாம் போன்ற நாடுகள் திருப்பூருக்கு சவாலாக மாறத் தொடங்கிய போதே இந்த உள்ளாடை உலகமும் சரியத் தொடங்கியது.  இறக்குமதியாளர்களைப் பொறுத்தவரையிலும் குறைவான விலை.  முடிந்தவரைக்கும் தரம்.  அவர்களின் லாபத்தில் எந்த குறைவும் இருக்காது. ஆனால் உற்பத்தியாளர்களின் மொத்த வாழ்க்கையும் வரவு செலவும் எல்லா விதங்களிலும் பாதிப்படையத் தொடங்குகிறது.  லாபத்தில் லாபம் என்பது மாறி லாபத்தில் நட்டம் என்பது தொடர்ந்து இன்றைய சூழ்நிலையில் நட்டத்தில் நட்டம் என்பதாக ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் வாங்கியுள்ள கடன்களுக்கு வங்கிகளுக்கு பயந்து கொண்டு தங்களையும் ஒரு ஆளாக நிறுவனத்தை மூட பயந்து கொண்டு பம்மாத்து காட்டிக் கொண்டுருக்கிறார்கள்.  ஒவ்வொரு நிறுவனங்களும் வெளியே சார்ந்து உள்ள துணை நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கொடுத்து முடிந்தால் மேலாடைகள் காணாமல் போய் விடும்.  இதற்கு மேலும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதை செலுத்த நிர்ப்பந்தம் உருவானால் அணிந்து இருக்கும் உள்ளாடைகளையும் இழக்க நேரிடும்.  இது தான் நிதர்சனம்.

ஒரு நிறுவனத்தில் வேலையில்லையோ அல்லது குறைவான பணியோ என்றவுடன் அந்த சூழ்நிலையில் மற்றொரு நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் அப்பொழுதே போய் சேர்ந்து விட முடியாது. ஒவ்வொரு சனிக்கிழமை வரைக்கும் வாரச் சம்பளம் போடும் வரைக்கும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.  இரண்டு நாள் ஆறு நாட்கள் என்றாலும் வேலை செய்த சம்பளத்தை கைப்பற்றாவிட்டால் அது காந்தி கணக்கில் போய் சேர்ந்து விடும். நாதாரித் தனத்திற்கென்று ஏதோ ஒரு நாயகன் ஒவ்வொரு இடத்திலும் உட்கார்ந்துருப்பார்கள். ஏழை சொல் அம்பலத்திற்கு ஏறாது என்பதை கண்கூடாக பார்க்கலாம். சகித்துக்கொண்டு போராடத் தான் வேண்டும். இன்று வேலையில்லை. நாளை வந்து விடு? என்றால் எதிர் பேச்சு பேசாமல் வீட்டுக்குள் வந்து முடங்கியிருக்கத்தான் வேண்டும்.  வீடு என்பது  ஏறக்குறைய ஓடுகள் வேயப்பட்ட வரிசை வீடுகளாக இருக்கும்.  கட்டியவர்கள் செய்த கைங்கர்யத்தால் இரண்டு வீட்டின் அளவு ஆறு வீடாக மாறியிருக்கும். வசதி என்பது மறந்து இரவில் ஒரு படுக்க இடம்.  அவ்வளவு தான்.  

தொழிலாளர்களை ஒவ்வொரு கிராமங்களும் தொழில் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து கொண்டுருக்கிறது. ஆனால் சிறு நகரங்களில் இருந்து பட்டதாரிகளை பணியாளர்களாக இந்த உள்ளாடை உலகம் இறக்குமதி செய்து கொண்டுருக்கிறது. நம்பி கிளம்பி வரும் எவரையும் திருப்பி அனுப்பாத ஊர் என்பது இன்று வரைக்கும் உண்மையாகத்தான் இருக்கிறது. வந்து இறங்குபவர்கள்  சுழிவுகளை, தந்திரங்களைக் கற்றுக் கொண்டு தங்களை மாற்றிக் கொண்டால் நிறுவனங்களுக்கு கற்றுக் கொடுப்பவர்களாக மாறி விடுகிறார்கள். ஏற்கனவே உள்ளே வந்தவர்களின் தூரத்துச் சொந்தம், நண்பர்கள், தெரிந்தவர்கள் முகவரி வாங்கி வந்து முண்டியடித்துக் கண்டுபிடித்து உள்ளே வந்து தனக்கான இடத்தை கண்டு பிடித்தாக வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்கள் எந்த பாரபட்சமும் இல்லை.  அவரவர் வினை வழி.  அவரவர் விதி வழி. கையூண்டி கரணம் போட வேண்டிய வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் பேரூந்து, ரயில் நிலையத்தில் ஏதோ ஒரு சமயத்தில் தனியாக கும்பலாக, துணைகளோடு வந்து இறங்கிக்கொண்டுருக்கும் இவர்கள் எண்ணங்கள் நோக்கங்கள் ஒன்று மட்டுமே.  பணக்காரன் ஆக வேண்டும், தொழில் அதிபர் ஆக வேண்டும் என்பதல்ல.  வாழ்க்கை வாழ்வதற்கு தேவைப்படும் இந்த உயிர் உடம்பில் இருக்க உழைத்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வந்து கொண்டுருக்கிறார்கள். 

அரசாங்கமென்பதும், ஜனநாயகம் என்பதும் எப்பொழுதாவது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இலவச வண்ணத் தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டு நல்ல குடிமகனாக வாழ்ந்து விட வேண்டும்.

தங்களுக்கான வாழ்க்கையைத் தேடி வந்தவர்களை, வாரிக் கொடுத்து வாழவும் வைத்துப் பார்த்த இந்த ஆடைகள் உலகம் இப்போது நாறிக்கொண்டுருக்கிறது. திருவாளர் ப.சிதம்பரம் முந்தைய ஐந்து வருட ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று அவரின் பார்வை திருப்பூரில் பட்ட போது பட்ட மரமாக மாறத் தொடங்கியது. " என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று முடிந்தவரை ஜனநாயக கடமையை ஆற்றி விட்டு ரணங்களை கொடுத்து விட்டு இப்போது ஜார்கண்ட் பிரச்சனையில் தவித்துக் கொண்டுருக்கிறார். வேண்டா வெறுப்பாக தயாநிதி மாறன் ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது " அரசாங்கத்தின் கொள்கைகள் தெளிவற்றதாக இருந்தால் ஒவ்வொரு நிறுவனமும் மூடு விழாவை நோக்கி நகரத் தொடங்கும்" என்று எட்டு மாதங்களுக்கு முன் வேர்ட்ப்பரஸ் ல் நண்பர் சுவாமிநாதன் எழுதிய பின்னோட்டத்திற்கு எழுதினேன். அது தான் முழுக்க முழுக்க உண்மையாக இருந்து தொலைக்கின்றது.  இப்போது இரண்டு தமிழர்களும் ஒரு வருடத்தைக் கடந்து வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டுருக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டுருக்கும் பெரிய நிறுவன முதலாளிகள் இப்போது முழு நேர ஆன்மீகவாதியாக மாறிக்கொண்டுருக்கிறார்கள்.  ஆட்சியாளர்களை நம்புவதை விட அவதார உருவங்களாவது தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிவிடாதா என்ற ஏக்கத்தில் அவர்களின் ஒவ்வொரு இரவும் தூங்கா இரவுகளாக மாறிக்கொண்டுருக்கிறது. 

மானத்தோடு வாழ வேண்டும் என்று ஆடை உலகத்தை நம்பி வந்தவர்களுக்கு மானத்தோடு மரியாதையான வாழ்க்கையையும் இந்த ஆடைகள் உலகம் தந்தது. ஆனால் வாழ வைத்துப் பார்த்தவர்களின் வாழ்க்கை இப்போது நாறத் தொடங்கி பல மாதங்கள் ஆகி விட்டது. கோடிகளில் புரண்டவர்களின் "தரமான"   வாழ்க்கை இன்று தெருக் கோடிக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது?

ஏன்?

இன்றைய உள்ளாடை உலகத்தின் நிலைமை? எங்கே செல்லும் இந்தப் பாதை?  ஈழத்தில் அதிக அக்கறை செலுத்தியவர்கள், மாவேயிஸ்ட்களை அடக்குவதில் அதிக பிடிவாதம் காட்டுபவர்கள் இந்த நிமிடம் வரைக்கும் தொழில் நகர வளர்ச்சிகள் குறித்து அக்கறையின்றி இருப்பதன் காரணம்?

38 comments:

Unknown said...

//எங்கே செல்லும் இந்தப் பாதை? //

யார்தான் அறிவாரோ???

சிதம்பரம், மன்மோகன் , சோனியா கூட்டணி நம் நாட்டை அடகு வைத்து விட்டனர்..

தமிழ் உதயம் said...

வினவு தளத்தில் எழுதும் வில்லவன், அவர் தளத்தில் இது குறித்து எழுதி இருந்தார்.

எந்த தொழிலாக இருந்தாலும், அதன் ஆயுள் சொற்பமே. சாவு மணி அடிக்க யாராவது வந்து விடுகிறார்கள். நாறிக கொண்டிருக்கும் பல தொழிலில் இதுவும் ஒன்று.

திருப்பூர் போன்று இனி ஒரு தொழில் நகரம் உருவாவது சிரமம். அரசாங்கத்தால் புதியதை உருவாக்கவும் முடியாது. இருப்பதை பாதுகாக்கவும் தெரியாது.

ஜோதிஜி said...

நன்றி செந்தில்?

ரமேஷ்..

எதன் அடிப்படையில் ஆடைத் தொழிலின் ஆயுள் சொற்பம் என்று முடிவு செய்தீர்கள்? தனிப்பட்ட சிலரின் லாபத்திற்காக மொத்த மக்களின் வாழ்வாதரமே இன்று கேள்விக்குறியாகிக் கொண்டுருக்கிறது????

கண்ணகி said...

நிஜம்..உங்கள் ஒவ்வொரு எழுத்தும் நிஜம்...

நிகழ்காலத்தில்... said...

இன்னும் விரிவாக எழுதுங்கள் ஒவ்வொரு கட்டமாக, பிரித்து பிரித்து...

வாழ்த்துகள்

geethappriyan said...

தலைவரே,
நானும் 10ஆம் வகுப்பு முடித்த கையோடு லீவில் 2 மாதம் க்ரோம்பேட்டையில் இருந்த செலிப்ரிட்டியில் வேலை செய்துள்ளேன்,கொடுமையான ஷிஃப்டு,ஒரு நாளைக்கு 40 ரூபாய் என நினைவு,ச்தா மெஷின் சத்தத்திலும்,ஆழ்ந்த வேலை அழுத்தத்திலும் செய்ய வேண்டிய வேலை அது,அப்பன் கேடு கெட்டு போனால் பிள்ளைகள் அங்கே தான் இருக்கும்,வேதனையான விஷயம்,என்னுடன் வேலைக்கு சேர்ந்த இன்னும் நிறையே பேர்,4 முதல் 5 நிறுவனம் மாறி இன்னமும் கணவன் மனைவியாய் எக்ஸ்போர்டில் ஆடை தயாரிப்பில் வேலை செய்கின்றனர்.என்ன கடுமையாய் உழைத்தால் இருவருக்கும் சேர்த்து 12000 கிட்டும்,இப்போது வேறு நட்டத்தை காரணம் காட்டி நிறைய வேலை இழப்புகள் வேறு.:(

ஜோதிஜி said...

கண்ணகி

எத்தனையோ இங்குள்ள வலிகளை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை. சமூகம் என்பது இயல்பாக அரசாங்கத்தை எதிர்பார்க்காதே என்பதாக இந்த ஜனநாயக வாழ்க்கை அறிமுகம் செய்து கொண்டுருக்கிறது.

சிவா

முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றேன்.

கார்த்திகேயன்

பட்டமெல்லாம் பயமாயிருக்கு. தொழிலாளர்களை விட படித்து முடித்து விட்டு உள்ளே வரும் இளைஞர்கள் தங்களுக்குண்டான வாழ்க்கை தேர்ந்தெடுத்து ஏதோ ஒரு வழியில் மேலேறி வரும் போது கூட அரசாங்கக் கொள்கைள் கொள்ளைக்காரர்களின் கையில் இருப்பதால் இவர்களின் இழப்பு சொல்லிமாள முடியவில்லை.

பழமைபேசி said...

சிறப்பா...அவகாசம் அளித்து எழுதுகிறீர்கள்....

Thekkikattan|தெகா said...

அருமையான கட்டுரை... நன்றி!

படிக்கும் பொழுதே திருப்பூரை நினைத்தால் மிரட்சியாகத்தான் இருக்கிறது - sweat shop

\\எங்கே செல்லும் இந்தப் பாதை // - வேறு எங்கு இந்தப் பதிவின் கடைசி படத்தில் இருப்பதனைப் போன்று a haunted place...

ஜோதிஜி said...

மணிவாசகம்

எழுதுவதற்கு ஒவ்வொருவரும் எத்தனையோ காரணங்கள்????

ஆனால் உறங்கவிடாமல் தடுக்கும் எண்ணங்களை இறக்கிவைக்க இப்போதைய இங்குள்ள சூழ்நிலையில் இடுகையை விட்டால் வேறு வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

உங்களைப் போன்றோர்களின் தமிழ்ஆர்வத்தைப் பார்த்தாவது கார்த்திகேயன் என் தவறுகளை மன்னிப்பாராக???

கல்வெட்டு said...

// ஈழத்தில் அதிக அக்கறை செலுத்தியவர்கள், மாவேயிஸ்ட்களை அடக்குவதில் அதிக பிடிவாதம் காட்டுபவர்கள் இந்த நிமிடம் வரைக்கும் தொழில் நகர வளர்ச்சிகள் குறித்து அக்கறையின்றி இருப்பதன் காரணம்?//

அரசாங்கம் கேடுகெட்ட அரசாங்கம். சிதம்பரம் அல்லது கிரிக்கெட் கோமகன் பவார் ( விதர்பா விவசாயிகள் கொடுமை பற்றி யாரும் பேசவில்லை)போன்றவர்கள் நல்லவர்களாக மாறி சுபிட்சம் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது நடக்காது. :-(((

சரி, தொழிலை நடத்தும் முதலாளிகள் இந்தியர்கள்/தமிழர்கள்தானே? இவரகளில் பெரும்பாலோனர் உள்ளூர்காரர்களே . அங்காடித்தெரு லோக்கல் முதலாளிகளின் கொடுமை போலவே இவர்களின் செயலும்.

ஏன் இப்படி ?

பணம் பண்ணுவது என்ற ஒரே குறிக்கோள். யாரை வேண்டுமானாலும் அதற்காக காவு கொடுக்கத் தயங்காது. திருப்பூர் ,சிவகாசி பொன்றவை ஆரம்பகாலத்தில் விவசாயத்தில் இருந்த பண்ணையார் கூலி சுரண்டலின் நவீன வடிவமே.

இரவுப் பறவை said...

இதில் அரசாங்கம் தலையிட வேண்டும் வேலை பார்பவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக நிர்ணயிக்கப்படவேண்டும்....

இங்கு அரசாங்கமும் தூங்குவது போல் நடித்து கொண்டிருக்கிறது...மக்களும் எழுப்புவதுபோல் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.... பார்க்கலாம்.. .

எப்பொழுதும் போல் உங்கள் எழுத்து நடை ரசிக்க வைக்கிறது...........

ஜோதிஜி said...

பறவையாரே இத்தனை நாளாய் எங்கேயிருந்தீர்கள்????

(வைதேகி காத்திருந்தாள் பாடலை ஒலிப்பதாக கற்பனையில் கொண்டு வரவும்)

கல்வெட்டு பெயரில் மட்டுமல்ல. விமர்சனத்திலும்....
தொழிலாளி....பணியாளர்...முதலாளி என்ற எல்லா நிலையிலும் இருந்த காரணத்தால் மூன்று திசையில் உள்ள சாதக பாதக அம்சங்களையும் அலசித் தான் காயப் போடவேண்டும். இங்கு வர்க்கப்போராட்டம் முடியாது. காரணம் எல்லா இடங்களிலும் மறை கழன்று போய் உள்ளது. உரக்க கத்தக்கூட தெம்பில்லாமல் எது எதற்கோ பயந்து கொண்டுருக்கிறார்கள்.......

தெகா முதல் வருகைக்கும் உங்கள் " அக்கறைகளுக்கும்" நன்றி.

இரவுப் பறவை said...

ஜி....நீங்க word press இல் இருந்து மாறியதால் என்னால் கருத்துக்களை பதிய இயலவில்லை....இனி மாயாவியாக தொடர்வேன்.....

நன்றி.......

ஹேமா said...

ஜோதிஜி வணக்கம்.நிறைய நாளைக்குப் பிறகு வந்தாலும் சமூகப் பார்வையோடு ஒரு பதிவு.

ஜோதிஜி said...

பறவையாரே எல்லோரும் ரவுண்ட் கட்டி அடித்து இடுகை ஒன்று வேண்டும் என்று உருவாக்கி எழுத வைத்தார்கள். நீங்கள் இப்போது வேறு தனியாக பீதியை கெளப்புறீங்கள்?...... விரும்புகிறேன்....

ஹேமா நலமே விழைவு. வாருங்கள்.

துளசி கோபால் said...

அரசுக்குத் தன் பொறுப்பும் பணியும் என்னன்னே இதுவரைக்கும் தெரியலை.

தொழிலாளர் நிலை கவலைதருவதா இருக்கு ...ப்ச்

முதலாளியின் நிலையும் மோசம்.

இடையில் தின்று கொழுப்பவர்கள் 'வாழ்கிறார்கள்'

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையான கட்டுரை..திருப்பூரே ஒரு அங்காடி தெரு தான்...

ஜோதிஜி said...

வணக்கம் டீச்சர். மொத்தத்தையும் சத்தோடு சொல்லி விட்டீர்கள்........

இடையில் தின்று கொழுப்பவர்கள் 'வாழ்கிறார்கள்'

முதல் வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணன்.
இந்தஅங்காடி விரைவில் ஐயோ காலி என்று போய் விடுவோமோ என்ற அச்சத்தின் விளைவே இந்த தொடர்.

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ... இதில் திருப்பூருக்கு பதில் வேறு ஏதாவது ஊர் பேர் போட்டு, டெக்ஸ்ட்டைல்க்கு பதில் வேறு தொழில் பற்றி எழுதினாலும் ரொம்ப பொருந்தும் போல இருக்கு ... ( எல்லா இடத்திலையும் இது தான் நிலைமை ) ... நம்ப ஊருக்கு எதாவது நல்லது செய்யணும், அப்படின்னு நினைக்கிற அரசியல் வாதி யாரவது இருக்காங்களா என்ன ? ... இந்த கவர்ச்சியும் , இலவசமும் ...இருக்கிற வரை - ரொம்ப கஷ்டம் தான் வாழ்க்கை ...

ஜோதிஜி said...

சுந்தர் எனக்குத் தெரிந்த வரையிலும் சிவகாசி, நாமக்கல், ஈரோடு இவைகள் தொழில் சார்ந்த நகரங்கள். அதே சமயத்தில் இயல்பான பணத்தில் குறிப்பாக இந்தியப் பண பரிவர்த்தனைகள். ஆனால் இங்கு டாலா,யூரோ,பவுண்ட் முதல் அத்தனை கரன்சிகளும் புழங்கும் சூழ்நிலையில் இருப்பதால் வாழ்க்கையும் ஆகா ஓகோ என்று வெளிச்சமாக தெரிகிறது. அடிவாங்கினாலும் ஆற்காடு வீராச்சாமி கும்மிருட்டாகத் தெரிகிறது.

அரசியல்வாதிங்க எங்கே இருக்காங்க? இருக்கிற முக்கால்வாசிப் பேரும் அரசியல் வியாதியஸ்தர்கள்,

க.பாலாசி said...

ஒரு ஆறுமாசம் திருப்பூர் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறேன்... எத்தனையோ இன்னல்கள்... அங்கே உள்ள மக்கள் வேண்டுமென்றே ஏற்றுக்கொண்ட வாழ்க்கையது... என்னன்னு சொல்றது... இன்னமும் நாகை, குடந்தை, தஞ்சை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், இளைஞிகள் திருப்பூரைநோக்கி படையெடுத்தவண்ணம்தான் உள்ளனர்.. வருத்தமாகத்தான் இருக்கிறது. நல்ல விரிவான அலசல்... அழுத்தமாகவும் பதிந்துள்ளீர்கள்... தலைப்பும் வெகு பொருத்தம்...

தமிழ் உதயன் said...

நிகழ்கால திருப்பூரில் மனிதன் என்றோ இயந்திரம் ஆகிவிட்டான். தற்போது மீதம் உள்ள மனிதர்களும் ஈவிரக்கமில்லாத ஜந்துக்களாக மாறிகொண்டுள்ளான். இதுவும் நுகர்வோர் பொருளாதாரத்தின் விளைவே. ஆட்சியில் உள்ளோர் தங்கள் நிலையினை இன்னும் மேல் நோக்கி நகர்த்த முயற்சிக்கிறார்களே ஒழிய அவர்களால் வேறு ஒரு விளைவும் இல்லை. சீக்கிரம் இந்தியா என்ற ஒரு நாடு மக்கள் புரட்சியினால் 30 துண்டுகளாக சிதறி சின்னாபின்னமாகும் இது சாபம் அல்ல விதி

ஜோதிஜி said...

வணக்கம் பாலாசி.

அனுபவித்து வெளியேறியதால் தெளிந்த சிந்தனையில் இருக்கிறீர்கள். ரொம்ப நாளைக்குப்புறம் நீங்க வந்த ராசியோ என்னவோ தெரியல மக்கள் குத்து குத்துன்னு குத்தி குமிஞ்சுட்டாங்க...... நன்றி.

தமிழ் உதயன்.

விடாப்பிடியாக உரையாடி மொத்த இரண்டு தள மொத்த தலைப்புகளையும் படித்து இன்று விமர்சனம் மூலம் வெளியே வந்தமைக்கு நன்றி.

உங்கள் ஆசை பலிக்காது நண்பா. மக்கள் காந்திய பாதையில் அதிக சகிப்புத்தன்மை கடைபிடித்து மொத்த உணர்ச்சிகளும் மங்கிப்போய் நாளாகிவிட்டது. முதலில் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசர அவஸ்யத்தில் தான் ஒவ்வொருவரும் இங்க வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

தமிழ் அஞ்சல் said...

நானும் பிசிர் வெட்டியவன்..கஷ்டம் தான் ஜி..இவங்க மனம் படும் பாடு சொல்லிமாளாது.தொழிலாளர் நல சட்டம் எல்லாம் இங்கே செல்லாது.எல்லாம் பணம் படுத்தும் பாடு.

இராகவன் நைஜிரியா said...

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரிந்திருக்கின்றேன்.

எப்போது ட்யூட்டி டிராபேக் குறைக்க ஆரம்பித்தார்களோ, அன்றே ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆரம்பித்தது அழிவு.

நிறுவனங்களும், ஒரு பெரிய ஹெ.யூ.எஃப் (அ) குடிசைத் தொழில் மாதிரித்தான் நடக்கின்றன. இண்டஸ்டிரி என்ற அந்தஸ்த்தை எட்டவேயில்லை.

இன்றும் நண்பர்கள் சிலருடன் பேசும் போது, இனி ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தினால் நசிந்து போக வேண்டியதுதான் என்று சொல்லுகின்றனர்.

ஜோதிஜி said...

நன்றி மணி. அடிமட்ட ஊழியம் பார்த்து வலை உலகம் வரைக்கும் வளர்ந்துள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.


வணக்கம் இராகவன்.

நீங்கள் சொன்னபடி DUTY DRAW BACK எனப்படும் ஊக்கத்தொகை இழப்பு கூட ஓரளவிற்குத் தான். எப்போது போல பெரிய நிறுவனங்களுக்கு அதுவொரு டீ குடிக்கும் காசு. ஆனால் நம்பியிருந்த சிறு நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு. ஆப்பு வைத்தவர் ப.சிதம்பரம். என்ன காரணமோ?

ஆனால் நிறுவனங்கள் நீங்கள் சொன்னமாதிர் குடிசைத் தொழில் போலத் தான் எண்ணங்களாலும் தங்களுடைய செயல்களாலும் மொத்த தொழிலையும் கேவலப்படுத்திக்கொண்டு தானும் வாழாமல் மற்றவர்களையும் சாகடித்துக்கொண்டுருக்கிறார்கள்.

Anonymous said...

Your words 60% is correct 40% is wrong.You not give correct statement above labours views.If we shout a labour due to the wrong work then all workers not come on despatch day.
The factory owners all are pavapada manusanukaa
They maintain they carrier to others to get credit from others,to book orders,to show their status than office peoples,even they get for interest 8rs ,10rs interest to pay salary for labours.Any other person than tirupur owners not take risk in life .At anytime they can come down or go up.
Last ruling time chithamparam came to tirupur to inverse his own money,his son then take care of loose factories to close account in banks,he bought so many assets in tirupur

ulagathula pavapatta jeevanuka tirupur wonerkal than therichu konga nanperkaley

ஜோதிஜி said...

நீங்கள் பெயரை வெளியே காட்டிக்கொண்டு பேச விரும்பினால் இன்னும் மகிழ்ச்சியாய் இருந்தது இருக்கும்.

உங்கள் கணக்கில் சதவிகிதத்தில் தேர்ச்சி என்பதே மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விசயங்களை தொடர்ந்து படித்தால் என்னுடைய பார்வை உங்களுக்கு புரியலாம்.

20 வட்டிக்கு (ஒரு வாரத்திற்கு) கடன் வாங்கி சம்பளம் கொடுத்தவர்களையும் தெரியும்.

20 லட்சம் கையில் இருந்தும் மாதச் சம்பளத்தை 20ந் தேதிக்கு மேல் வேண்டுமென்றே தாமதமாக கொடுக்கும் நல்லவர்களுடனும் நான் பழகிக்கொண்டு அனுபவித்துக் கொண்டு தான வாழ்கிறேன்.

சிதம்பரம் குறித்து உங்களைப் போலவே தனிப்பட்ட விசயங்கள் நிறையத் தெரியும். ஆனால் இங்கு எழுதினால் பாதை மாறிவிடும்.

உங்கள் வருகைக்கு நன்றி. நிறைய பேசுங்கள். எதிர்மறை கருத்துக்களாக இருந்தாலும்.

Saminathan said...

இன்னும் எதிர்பார்க்கிறேன்..

திரும்பிப் பார்ப்பதற்குள் என் இளமை கட்டிங் வேஸ்டுக்குள் புதைந்து போயிருந்ததது...

மீட்டெடுக்கவெல்லாம் முயற்சிக்கவில்லை,

சுதாரித்து விலகி நிற்க எத்தனித்த போது முதுமை எட்டிப்பார்க்கின்றது் உடலில் - மனதிலும் வெறுமை...

பஞ்சாலே பிழைத்து பஞ்சாகவே போய்விடுவோமா...?

bandhu said...

மிக நல்ல, ஆழமான பதிவு.
இனி உடைகளுக்கு பெரிய மார்க்கெட் இருக்கும் என்று தோன்றவில்லை. ஒரு சிறிய அளவிலான niche market தவிர உடை விலை ஒரே அளவிலோ அல்லது மிக குறைந்த அளவு விலை உயர்விலோ தான் உள்ளது. Ofcourse, நான் சொல்வது நானிருக்கும் அமெரிக்காவின் நிலைமையை மட்டுமே. 10 வருடத்திற்கு முன் இங்கு van heusen சட்டை விலையில் இன்றும் அதிக மாற்றம் இல்லை. At least, the price should go up based on inflation! இப்படி இருக்கும்போது ஏற்றுமதியாளர் களுக்கு இவர்கள் கொடுக்கும் விளையும் கண்டிப்பாக அதிகரித்திற்காது.
என்ன சொல்வது! எதிர்காலம் வளமாக தெரியவில்லை.

ஜோதிஜி said...

சுவாமிநாதன்

உங்கள் விமர்சனமே ஒரு தனித்தலைப்பாக எழுத வேண்டும் போல் இருக்கிறது.

நிறைய எழுத மனம் துடிக்கிறது. அத்தனையும் தனிப்பட்ட நமது உரையாடல்கள்.

ஆனால் உங்கள் மனதைரியம் என்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டி.

வனம் said...

வணக்கம் ஜோதிஜி

என்னதான் மத்தவங்கள பற்றி சொன்னாலும் நம் தமிழர்களின் குணம் தனிக்குணம்.

இத்தனை கோடிகளில் புரண்டும் தங்களுக்கு ஒரு சரியான சாலை வசதியைகூட ஏற்படுத்திக்கொள்ளும் தகுதியற்றவர்கள்.

சாரியானதற்கு ஒன்று சேர்வதற்கும், சரியானபடி கேட்பதற்கும் நமக்கு சரியாக தெரிவதில்லை.

இராஜராஜன்

ஜோதிஜி said...

வாருங்கள் ரவி.

அமெரிக்காவில் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்?

இந்த இறக்குமதியாளர்களின் தரம் தராதரம் எதிர்பார்ப்புகள் குறித்து தொடர்ந்து வாசிக்க அழைக்கின்றேன்.

நிகழ்காலத்தில்... said...

//பஞ்சாலே பிழைத்து பஞ்சாகவே போய்விடுவோமா...?//

நாம எப்பாவுமே பஞ்சாப்போக ஒத்துக்கவே மாட்டோம்.
துணியாக நிச்சயம் மாறுவோம். :))

வாழ்த்துகள்

Anonymous said...

இது பற்றி நிறைய பேச/விவாதிக்க வேண்டியிருக்கிறது. தொடர் முடியட்டும். பார்க்கலாம்.

ஜோதிஜி said...

ரமேஷ் உங்கள் வருகைக்கும் ஓய்வு இல்லா வேலைகளுக்கிடையே உரையாடலுக்கு ஒதுக்கிய நேரத்திற்கும் நன்றி.

Thoduvanam said...

மனசெல்லாம் வலிக்குது.ஆயாசமாக இருக்கு . எங்கே போறோம்..விடிவு எப்போ ?.