Friday, November 27, 2009

உறங்க வைக்கும் தாலாட்டு

உண்மை தான்.(தியாவின் பேனா உருவாக்கிய தாக்கம்)

இலங்கை மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள படித்த தமிழர்களுக்கு அரசியல் மற்றும் அது சார்ந்த உள்ளே உள்ள விசயங்களை ஆராய்ந்து பார்க்க நேரமும் விருப்பமும் இருப்பது இல்லை.
என்ன லாபம்?  நட்டம்?

சின்ன உதாரணத்தை பாருங்கள்.

கள்ளச்சாராயத்தை தொழிலாக வைத்து தொடங்குபவர் காலப்போக்கில் கல்வித்தந்தை ஆகி சமூகத்தில் உயர்ந்த மதிக்கும் நபராக மாறி விடுகிறார்.

கொலை, கொள்ளையில் தொடங்கி வட்டம், நகரத்தில் தொடங்கி மாவட்டச் செயலாளர் மாற்றம் பெற்று இறுதியில் நாட்டின் சட்டத்தை தீர்மானிக்கும் அமைச்சர் வரைக்கும் அந்தஸ்தும் பெற்று விடுகிறார்.

பாலத்தை திறக்க வேண்டும் என்றாலும் அவரின் அனுமதியும், ஆசியும் இருந்தால் மக்கள் பயன்படுத்த முடியும்.  50 கார்களின் அணி வகுப்பு, கூட்டப்பட்ட கூட்டங்கள் இல்லை என்றால் அவர் அங்கு வரும் போதே பல விசயங்கள் மாற்றம் பெற்று இருக்கும்.

நாடு மாற மாணவர்கள் முன்னேற என்று துணைவேந்தர் அறிவுரை சொன்னால் அது ஆட்சியாளர்களின் பார்வையில் நெகடிவ்.

நாடு சுபிட்சமாக சிறப்பாக இருக்கிறது என்று தினந்தோறும் மின்சாரம் கண்டுபிடித்தவருக்கு மின் வெட்டு மூலம் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தால் அது சிறப்பான ஆட்சி. பாஸிட்டிவ் எண்ணங்கள்.

அதுவே 25 வருடங்கள் உழைப்பும் கல்வியே கதியே என்று ஆகி அதிகபட்சமாக மாவட்ட ஆட்சியர் என்று மாற்றம் பெறுவர்களும், சிறுக சிறுக முதலீடு மூலம் உண்மையாக நேர்மையான வழியில் வந்து தொழில் அதிபர் ஆக மாற்றம் பெறுபவர்களும் கடைசியில் மேலே உள்ள இரு நபர்களுக்கு இடையில் தான் வந்து சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறார்கள்.

இதில் மற்றொரு அப்பாவி திருவாளர் பொதுஜனம் இருக்கிறார். கல்வி அறிவினால் கிடைத்த உன்னத பதவியை வைத்துக்கொண்டு பயந்து கொண்டே வாழ்க்கை முழுவதும் நாகரிக அடிமையாய் வாழ்ந்து செத்துப் போவது.

"இந்த சங்கநாத்தமே வேண்டாம்" என்பவர்கள் உன்னத உழைப்பு மூலம் கடல் தாண்டி ஓடிப்போய் "ஆளை விடுங்கடா சாமி" என்று அவர்களின் மொத்த தலைமுறைகளும் நாங்களும் இந்தியர், நானும் தமிழன் என்று பின்னால் வரும் குழந்தைகளுக்கு இந்தியாவை வரைபடத்தில் காட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மீண்டும் உள்ளே வராலாமா?  வேண்டாமா? என்று அவர்களின் மனம் சாகும் வரைக்கும் ஆடு புலி ஆட்டம் காட்டிக்கொண்டு இருக்கும்? அன்றைய தினம் படித்த இந்திய செய்திகள் அதையும் சமாதி கட்டி விடும்.

நல்ல அதிகாரிகள் நல்ல தலைவர்கள்,இந்தியா உண்மையாக வளர்ச்சி பெற்ற நாடாக வேண்டுமென்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் கலந்து இருந்தால் அருந்த முடியுமா?

எந்த நாள் இந்த விசம் வீர்யம் இழக்கும்?  காலம் மாற மாற இந்த ஒரு துளி தான் குடம் முழுக்க தளும்பிக்கொண்டுருக்கிறது.

சர்வாதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சாவு மணி அடித்த போதும் கூட உருவாகிக்கொண்டுருக்கும் அத்தனை புரட்சி எண்ணங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடுகளும் நம் கண் முன்னால் தான் இருக்கிறது.

நாம் உழைத்தால் நாம் முன்னேறலாம்.  வாய்ப்பு வராமலா போய்விடும் என்று தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு தங்களுடைய தனி மனித வாழ்க்கை மிகச் சிறப்பாக வாழும் மக்களையும் இந்தியா போன்ற ஒவ்வொரு நாடும் பெற்றுத்தான் உள்ளது.

உலகம் முழுக்க இது தான்.

ஜனநாயகத்தில் சிறப்பும் இது தான். வெறுப்பும் இது தான்.

63 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை.  சுதந்திரம் ஆன போது தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்த்து திட்டித் தீர்த்தார்கள்.

"வெள்ளைக்காரன் வெளியேறிவிட்டான்.  இனி இந்திய நாட்டுக்குள் கொள்ளைக்காரர்கள் அதிகம் உருவாக்கம் பெறுவார்கள்".

காரணம் ஜார்காண்ட் முன்னாள் முதல் மந்திரி மதுகோடா 15 வருடத்திற்கு முன் தினக்கூலி.  இன்று பணத்தை எண்ண சோம்பேறி பட்டுக்கொண்டு எந்திரத்தின் மூலம் எண்ணிக்கொண்டு இருக்கிறார்.  அவர் கொண்டு வாழ்ந்த எண்ணத்தால் இந்த அளவிற்கு உயர்ந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

சட்டம் கடமையைச் செய்யும்.  அது வரைக்கும் காலன் நம்முடைய காலத்தை காலாவதி ஆக்காமல் இருக்க தந்தை பெரியாரையும், சக்தியையும் வேண்டிக்கொள்வோம்.

எப்போது சிந்தனையாளர்களை விட கொள்கையாளர்கள் சிறப்பு பெற்றார்கள்?

உருவான அத்தனை உண்மையான கொள்கைகளும்,கலையும், கொலையாளர்களின் கையில் போய்ச் சேர்ந்த போது.
உருவான அத்தனை கொள்கைகளும், கலைகளும், பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்று எண்ணாமல் காசு வருமா? சம்பாரிக்க முடியுமா? என்று நோக்கம் மேலோங்கும் போதே அத்தனையும் கீழே போய்விட்டது.

அறிவு பின்னால் தள்ளப்பட்டு, திணிக்கப்பட்ட கொள்கைகள் முன்னால் மிதக்க ஆரம்பித்தது விட்டது. நாற்றத்தை காலப்போக்கில் பல பட்டங்களின் மூலம் நாமும் சகித்துக்கொண்டு வாழ பழகி விட்டோம்.
மொத்தமாய் எதைப்பார்த்தாலும் சந்தேகம்.

எல்லாமே பொய். எல்லாமே நிஜம்.

முக்கிய தமிழனின் அத்தனை கலைகள், கொள்கைகள், மூளையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு அதன் உண்மையான நல்ல விசயத்தை கூட மறைத்து பணத்தின் அடிப்படையில் மூடத்தை முடிந்தவரைக்கும் பரப்ப ஆரம்பித்தனர்.

இப்போதைய வாழ்க்கை நன்றாக இருக்கும்?  வழித்தோன்றல்கள்?

பல ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து வாழ்ந்தாலும் நேற்று வரைக்கும் கேரளாவில் நடந்து கொண்டுருக்கும் அத்தனை நிகழ்வுகளை ஒரு கேரளாவின் கடைநிலை தொழிலாளி தெளிவாக விளக்குவார்.  வாய்ப்புக்கு காத்து இருப்பார்.  அன்று அச்சுக்கு ஆப்பு அடிப்பார்.

மார்வாடி, வட இந்திய அத்தனை தொழில் சார்ந்தவர்களும் மாநில மத்திய அத்தனை அபத்தங்களும் தங்களை காத்துக்கொள்ள வேண்டிய அவஸ்யத்தையும் புரிந்து கொண்டு பயணிப்பார்.

ஆனால் எப்போதும், தற்காப்பில் தமிழனை வேலைக்கு வைத்து இருப்பார்கள்?

தமிழன் என்பவன் எங்குமே பொதுப் பார்வையில் அடங்குவதால் இந்தியா இலங்கை என்று சேர்ந்தே தான் இங்கு பயணிக்க வேண்டியதாய் இருக்கிறது.

இலங்கையில் முதல் பிரதமர் சேனநாயகா வரைக்கும் தமிழர்கள் பெற்ற பரிசு.

1. இலங்கை என்பது ஒரே நாடு.
2. தமிழர்கள் என்பவர்கள் சிறு சிறு குழுக்களாக இயங்கிக்கொண்டுருப்பவர்கள். எனவே இவர்கள் சிறுபான்மையினர்.
3. ஆங்கிலேயர்களின் பார்வையில் மொத்த தமிழர்களும் சிறப்பானவர்கள், கல்வி அறிவை அதிகம் பெற்றவர்கள்.  ஆனால் ஆள தகுதி அற்றவர்கள்.
4.  அதனால் என்ன?  தங்களுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

5. சிங்களர்களை ஏன் ஆதரித்தார்கள்?  நெறிவு சுளிவு அறிந்தவர்கள்.  நிஜ வாழ்க்கையை கற்றவர்கள்.  அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள்.
ஆங்கிலேயர்களுக்கு சாதகம் என்று கேட்பதை பாதகம் என்று கத்தாதவர்கள்.

6. அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கும் அளவிற்கு காய் நகர்த்தினால் எதிர்காலத்தில் நமக்கும் சிறப்பாக இருக்கும்.  காரணம் சேனநாயகாவிற்கு பிறகு அவரது மகனை தான் அன்றைய ஆங்கிலேய கவர்னர் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி ஆட்சி அமைக்க அழைத்தார்.  பின்னால் உருவான உணவு பஞ்சத்தை சமாளிக்க முடியாமலும், சரியான நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தாலும், சிங்கள இன வெறியை தூண்டி பண்டார நாயகா ஆட்சியை பிடித்ததும் இதன் தொடர்ச்சியே.

அந்த நிமிடம் வரைக்கும் பிரிட்டன் படைகள் இலங்கையில் தான் இருந்தது.

6.  தொடக்கத்தில் உருவான தமிழ் தலைவர்களான சர் அருணாச்சலம், அவருடைய வழித்தோன்றல்கள் சர் பொன்னம்பலம் என்று அத்தனை பேர்களும் ஆங்கிலேயர்கள் மத்தியில் சிங்களர்களை விட பல மடங்கு சிறப்பு பெற்றவர்கள்.  ஆனால் காந்தியடிகளைப் போலவே பொதுப்பார்வை பார்த்தவர்கள்.  ஆனால் இவர்களுடைய பார்வைகள் அத்தனையும் புழுத்துப் போன பார்வைகள் மட்டுமே கொண்டு வாழ்ந்த மொத்த சிங்கள தலைவர்கள் மத்தியில் செல்லுபடி ஆகவில்லை.

7.  காந்தி தன்னை தானே வருத்திக்கொண்டு "நீ சுதந்திரம் தந்தால் தான் ஆச்சு" என்று போராடினார்.  நேரு தொடர் ஓட்டத்தில் இருந்தார்.  ஆங்கிலேயர்களிடம் இருந்த பார்வை அத்தனையும் சிங்கள தலைவர்களிடம் எதிர்பார்த்த இவர்கள் பார்வை என்பதை எதனுடன் நீங்கள் ஓப்பிட முடியும்.  "காற்று அடிக்கும் போது மாவு விற்ற கதை."

8.  சிங்களர்களிடத்திலும் ஒற்றுமை இல்லை.  அடுத்த ஆட்சிக்கு நானா? நீயா? என்று தான் தொடக்கம் முதல் போராடிக்கொண்டுருந்தார்கள்.   ஆனால் ஒரே ஒரு விசயத்தில் மிக கவனமாக இருந்தார்கள்.  ஒவ்வொரு தலைவரும் உள்ளே வரும் போது எதிர்கால தமிழர்களின் அடிப்படை சுவடுகள் கூட இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆட்சியிலும் மிக தீர்க்கதரிசன பார்வையில் காய் நகர்த்திக்கொண்டே வந்தார்கள்.  வென்றார்கள்.

9.  ஒவ்வொரு அதிபருக்கும் உலகமெங்கும் ஒரு ராசி உண்டு.  ஆனால் இன்றைய மகிந்த ராஜபக்சே வுக்கும் மொத்த இலங்கை அதிபர்களை விட சிறப்பான ராசியும் பார்வையும் உண்டு.  காரணம் கிரஹப்பிரவேசம் நடத்தியதும் இவர் தான்.  மூடு விழா நடத்தியதும் இவர் தான்.  உழைத்தவர்கள் பல பேர்கள்.  உலகப்புகழ் பெற்றது இவர் மட்டுமே.

என்ன ஒன்று?

இனி சரித்திர பக்கத்தில் ஹிட்லரின் தம்பி இல்லை என்ற ஆதங்கமும் இந்த தங்கத்தலைவரை பார்க்கும் போது படிக்கும் போது தீர்ந்து விட்டது..

குடியுரிமைச் சட்டம் மூலம் இன்றைய அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமான மொத்த தமிழர்களையும் கூறாக போல் பிரித்தது மட்டும் அல்லாமல்  நீங்கள் அனைவரும் இலங்கையில் வாழவே தகுதியில்லை என்கிற அளவிற்கு தீர்ககதரிசனமாய் பல விசயங்களை அட்டகாசமாக செயல்படுத்தி போட்ட அஸ்திவாரத்தை அன்றே சிங்கள தலைவர்கள் பலப்படுத்த தொடங்கி விட்டனர்

இவர் மட்டுமல்ல ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு தலைவர்களும் மிகச் சிறப்பாக தந்திரமாக.  இதில் மற்றொரு ஆச்சரியம் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல ஆசைகளினால், வேறு வழியில்லை என்ற இரு நோக்கத்தில் தமிழ் தலைவர்கள் தான் இவர்களின் ஆட்சியை தாங்கியவர்கள், வலுப்படுத்த உதவியர்கள்.

அத்தனை பேருமே ஆயுதம் ஏந்தாமல் காந்திய வழியில் வருபவர்கள்.

தமிழர்கள் எப்போதும் பல கட்சிகள், பல நோக்கங்கள், பல கொள்கைகள்.  தொடக்கம் முதல் சிலோன் என்ற பெயர் தான் இருந்து வந்துள்ளது.  1972 அன்று தான் சமஸ்கிருத கலப்புடன் SRILANGA என்று மாற்றம் பெற்றுள்ளது.

பட்டியலைப் பாருங்கள்.

தொடக்கத்தில் சிலோன் சீர்திருத்த அமைப்பு, சிலோன் தேசிய சங்கம், யாழ்பாண சங்கம்.

இது மூன்றும் சேர்ந்து (1) சிலோன் தேசிய காங்கிரஸ் (சர். பொன்னம்பலம் அருணாச்சலம்)  இவருடைய கல்வி தகுதி, உழைப்பு, கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது.

அரசியல் அரிச்சுவடியை,மொத்த தந்திர பாடங்களை கற்றுக்கொண்டு இதில் இருந்து உருவானது தான் ஐக்கிய தேசிய கட்சி (சேனநாயகா).

ஆனால் இதில் இருந்தும் பல பிரிவுகள் பின்னால் பிரிந்தாலும் அத்தனை பேர்களும் ஆட்சி வரைக்கும் வந்து வெற்றிக் கொடி நாட்டினார்கள். மொத்தமாக தமிழர்களின் வாழ்க்கையை சிதைக்க தங்களால் ஆன அத்தனையும் மறக்காமல் செய்தனர்.

(2) யாழ்பாணம் இளைஞர் காங்கிரஸ்.  (இவர்கள் தொடக்கம் முதல் தேர்தல் புறக்கணித்து மொத்தமாக விடுதலை வேண்டும் என்றவர்கள்)

(3) சிலோன் விவசாய காங்கிரஸ் ( இதில் சிங்களர்களுடன் தமிழ் தொழிலாளர்களும்)

(4)  முஸ்லீம் அமைப்புகள் (1946)

(5) இந்திய இலங்கை காங்கிரஸ் (தொண்டைமான் தலைமையில்)

(6) சிலோன் இந்திய காங்கிரஸ்

(6) அனைத்து சிலோன் தமிழ் காங்கிரஸ் (ஜீஜீ பொன்னம்பலம்)
    (தமிழ்நாட்டில் திமுக வில் பிரிந்த அதிமுக போல்)

(7) இலங்கை தமிழரசு கட்சி ( தந்தை செல்வா)

இது போக வெளியே தெரியாமல் பல கூறாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் சங்கங்கள்.

இதிலும் தொடர்வதிலும் உப பிரிவுகள் பிரிந்து இன்றைய காலகட்டத்தில் பொது வேட்பாளர் பக்கம் ஆதரிக்கப்போகும் தமிழர்களின் கட்சி வரைக்கும் பல உண்டு.

மேலே சொன்ன பட்டியல் பண்டார நாயகா ஆட்சியில் வரும் வரைக்கும் மட்டுமே.

வன்முறை தேவையில்லை என்று சொல்லும் அத்தனை பேர்களும், அன்றே இந்த ஜீஜீ பொன்னம்பலத்தின் துரோகத்தை இனம் கண்டு சரி செய்து இருந்தால் இன்றைய மொத்த தமிழனமும் அழிந்து போய் இருக்காது.  இந்த சரித்திர பக்கங்களில் இந்த சிங்கள தலைவர்கள் உருவாக்கிய அணர்த்தங்களை மட்டுமே தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

காலணி ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆங்கிலேயர்கள் கூட ஒரே ஒரு முறை தான் ஆங்கிலேயர்கள் எதிரே வரும் போது முட்டி போட்டுக்கொண்டு நடந்து வர வேண்டும் என்று இந்தியாவில் ஒரு அசிங்க சட்டத்தை உருவாக்கினார்கள்.  ஆனால் உருவான எதிர்ப்பால் அதுவும் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.

ஆனால் சிங்களர்கள் காலம் முழுக்க முட்டி மட்டும் போட்டால் போதாது.  முழுமையான இனமும்  அழிந்து போய்விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு இன துவேச நடவடிக்கைகளை மிக சிறப்பாகத் செயல் முறைப்படுத்தி இன்று வெற்றியும் கண்டு விட்டனர்.

ஏன் 1970க்கு பிறகு ஆயுதம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.  அது தான் இறுதி வாய்ப்பு என்று பாதை மாறிய கதைகளும், போராட்டங்களும் உருவானது?

மாற்றுக்கருத்து சொன்னவர்களை பிரபாகரன் சர்வாதிகாரத்தின் மூலம் ஏன் கொன்றார்?  ஏன் விரும்பவில்லை? போன்ற பல காரணங்கள் ஒவ்வொன்றையும் உள் வாங்கிக்கொண்டே வாருங்கள்.

இன்றைய நவீன உலகத்தில் தூக்குத் தண்டனை என்பது கூட அசிங்கத்தின் உச்சக்கட்டம் என்று மனித நாகரிகம் சொல்கின்றது.  ஆனால் இன்று வரையிலும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இம்மி அளவும் தங்களுடைய கருத்துக்களை மாற்றத் தயாராய் இல்லை.  காரணம்?

அவர்களுக்குத் தான் தெரியும் வலியும் உருவான வழியும்?

இலங்கையில் பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் வாழ்ந்த தலைவர்கள், நோக்கங்கள், அவர்கள் மூலம் பெற்றவைகள் ஒவ்வொன்றும் நாம் உணர்ந்து உள்வாங்க வேண்டும்.

சக மனிதனை கொல்வதும், சக மனிதனை வெடிகுண்டாக மாற்றம் பெறச்செய்தும், கொல்லச் செய்வதும் முறையா?  தகுமா?  அருவருப்பாக இல்லையா?  ஆயிரம் கேள்விகள் நமக்குள் உண்டு.

உலகம் மாற்றம் அடைந்து வந்து கொண்டு தானே இருக்கிறது.  அவசரமாய் செயல்பட்டவர்கள் என்ன சாதித்தார்கள்?  பொறுமையாக இருந்து இருந்தால் இந் நேரம் இத்தனை பெரிய அழிவு உருவாகி இருக்குமா?

நம் முன் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள்.

சிங்கள தலைவர்களின் சட்டங்கள், அதனால் வாழ்க்கையும், வாழ்வுரிமையையும் இழந்த அன்றைய தமிழர்கள்.  ஆனால் அன்று சிங்கள தலைவர்களை தாங்கி நின்ற தமிழர்கள் என ஒவ்வொன்றும் நமக்கு பல படிப்பினைகளை கற்றுத் தருகிறது.

சுதந்திரம் அடைந்து முதல் ஆட்சி அதிகாரத்திற்குள் உருவான அக்கிரமத்தைப் பார்த்தோம்.  ஆனால் அப்போதே மறைமுகமாக குடியேற்றம், துரத்தி அடிக்கப்படுதல், வாழ்க்கையை சூறையாடுதல் போன்ற பல விசங்களை அன்றே தொடங்கி படிப்படியாக படிக்கும் கல்வி வரைக்கும் கொண்டு வந்து கை வைத்தார்கள்.
சரியா? தவறா? பயணிக்கும் போது பாதை புலப்படும்.

1 comment:

நிகழ்காலத்தில்... said...

\\உருவான அத்தனை கொள்கைகளும், கலைகளும், பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்று எண்ணாமல் காசு வருமா? சம்பாரிக்க முடியுமா? என்று நோக்கம் மேலோங்கும் போதே அத்தனையும் கீழே போய்விட்டது.\\

ஈழ வரலாறு எழுதும்போதுகூட சமூக அக்கறையோடு
எழுதுகிற உங்களை வாழ்த்துகிறேன்.

இதோ வலையுலக வாத்தியார் சுப்பையா அவர்கள் தெளிவாகச் சொன்னது

”கல்வி, மருத்துவம், ஜோதிடம் - இம் மூன்றும் பண்டைய காலத்தில் தர்மத் தொழில்கள்.
இந்தத் தொழிலைச் செய்பவன் மக்களிடம் காசு வாங்கக்கூடாது. அரசு மான்யத்தில்
வாழ்க்கையை நடத்த வேண்டும். இப்போது அப்படியில்லை என்பதுதான் வருந்த வேண்டிய
விஷ்யம்.”

வாழ்த்துகள்